அதிமுக அரசை கவிழ்க்க சதி.... எடப்பாடி பழனிச்சாமி அலறல்
அதிமுக அரசை ஓபிஎஸ் அணியினர் கவிழ்க்க சதி நடப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: அதிமுக அரசை திமுக உடன் இணைந்து ஒ.பன்னீர் செல்வம் அணியினர் கவிழ்க்க சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் அணியினர் மீது குற்றம் சாட்டினார்.
முதல்வராக பதவியேற்ற பின்னர் சொந்த ஊரான சேலத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி நேற்று வந்தார். அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தனது வீட்டில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்றைய தினம் தங்கச்சி மடம் மீனவர் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டு ஒருவர் மரணம் அடைந்தார். ஒருவர் காயமடைந்து மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகிறார்.மரணம் அடைந்ததற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும், காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
நாடாளுமன்றத்தில் குரல்
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது நடத்திய தாக்குதல் கண்டனத்துக்கு உரியது. அடிக்கடி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இது குறித்து, நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் நாடாளுமன்றத்திலும், பிரதமரிடமும் குரல் எழுப்புவோம் என்று கூறினார்.
ரேசன் கடையில் பொருட்கள்
ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாவது குறித்து கேட்ட கேள்விக்கு, ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தங்கு தடையில்லாமல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர் பழனிசாமி.
வாட் வரி உயர்வு
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, வெகு நாட்களாக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்படாமல் இருந்தது. இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை விட பெட்ரோல் விலை தமிழகத்தில் குறைவாகவே உள்ளது என்றார்.
மேட்டூர் அணை
மேட்டூர் அணையை தூர்வாருவதற்கான முழு திட்ட அறிக்கை, ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்து விரைவில் தூர்வாரும் பணி தொடரும் என்று பழனிச்சாமி கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து சேலம், நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ஓ.பன்னீர் செல்வம் அணியினர், திமுக உடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டியுள்ளதாகவும் கூறினார்.