புதிய தமிழகம், கொ.ம.தே.க. உள்ளிட்ட சிறிய கட்சிகளை வளைத்து மெகா கூட்டணி அமைக்க திமுக மும்முரம்
சென்னை: திமுக- காங்கிரஸ் கூட்டணியில் புதிய தமிழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல சிறிய கட்சிகளை வளைத்து மெகா கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆளும் அதிமுகவை விட திமுகவுக்கான வாக்கு பலம் என்பது 5 முதல் 6 % குறைவு. இதனால்தான் 5 முதல் 6% வாக்குகளை கொண்டிருக்கும் தேமுதிக கூட்டணிக்கு வந்தால் என கணக்குப் போட்டது திமுக.

தேமுதிக அச்சம்
ஆனால் எங்கே திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால், தேர்தலில் வென்ற பின்னர் அதிமுக செய்ததைப் போல எம்.எல்.ஏ.க்களை இழுப்பது, கட்சியை உடைப்பது என்ற நிகழ்வுகள் அரங்கேறிவிடுமோ என்ற அச்சத்தில் தனித்துப் போட்டி; தனி அணியாகப் போட்டி என தீர்மானித்திருக்கிறது தேமுதிக.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
இது திமுக தரப்பை அதிர்ச்சி அடையச் செய்தாலும் தற்போது 5 முதல் 6% வாக்குகளை சமன் செய்ய சிறிய கட்சிகளைக் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கனவே திமுக அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருக்கிறது.

புதிய தமிழகம், கொ.ம.தே.க.
தென்மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் செல்வாக்கு பெற்ற புதிய தமிழகம், கொங்கு மண்டலத்தில் வாக்குகளை சமன் செய்ய ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றை வளைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் மனித நேய மக்கள் கட்சியில் இருந்து வெளியேறிய தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்க்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கார்த்தி, டி.ராஜேந்தர்
அத்துடன் தேவர் சமூக வாக்குகளை கவர நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, நாடார் சமூகத்தின் பெருந்தலைவர் மக்கள் கட்சி டி. ராஜேந்தரின் லட்சிய திமுக ஆகியவற்றையும் திமுக கூட்டணிக்குள் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications