குலாம்நபி சந்தித்தாலும் தொகுதி பங்கீட்டு பேச்சை விஜயகாந்துக்காக ஒத்திவைக்கும் திமுக
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தாலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் நிலைப்பாடு உறுதியாகத் தெரியாமல் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை உடனே நடத்தப்போவதில்லை என திமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்கிற 'கிளைமாக்ஸ் காலம்' நெருங்கிக் கொண்டிருக்கிறது. திமுக- காங்கிரஸ்- தேமுதிக இணைந்து கூட்டணி அமைக்கும் என கூறப்பட்ட நிலையில் திமுக- காங்கிரஸ் கூட்டணிதான் தற்போதைக்கு உறுதியாகும் நிலை உள்ளது.
தேமுதிகவைப் பொறுத்தவரையில் திமுகவின் அழைப்புக்கு எந்த ஒரு பதிலையும் உறுதியாக தரவில்லை. அதே நேரத்தில் தேமுதிகவை எப்படியும் வளைத்து கூட்டணியை உறுதி செய்வதில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக இருக்கிறது. விஜயகாந்த்தோ இன்னமும் திமுக பக்கம் போகலாமா? பாஜகவுடன் கை கோர்க்கலாமா? மக்கள் நலன் கூட்டணியுடன் இணைந்துவிடலாமா? என்ற ஊசலாட்டத்தில் இருந்து வருகிறார்.
பரபர சந்திப்புகள்
இந்நிலையில் கூட்டணிகளை இறுதி செய்யும் பேச்சுவார்த்தை நடத்த கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தும் விஜயகாந்த்தை மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயலும் இந்த வாரம் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்புகள் உறுதியாகி இருக்கும் நிலையில் திமுக- பாஜக- தேமுதிக கூட்டணி அமையலாம் என்ற யூகங்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.
தொகுதி பேச்சு இப்போது இல்லை...
அப்படியே குலாம்நபி ஆசாத் சென்னை வந்து கருணாநிதியை சந்தித்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையை திமுக உடனே தொடங்கிவிடாது என்றே கூறப்படுகிறது. திமுகவைப் பொறுத்தவரையில் எப்படியும் தேமுதிக தங்களது கூட்டணிக்கு வந்தே தீரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் உள்ளதாம்.
விஜயகாந்துக்காக காத்திருப்பு
ஆகையால் விஜயகாந்த் என்ன இறுதி முடிவை எடுத்து அறிவிக்கிறாரோ அதுவரை காத்திருந்து அதன் பின்னரே காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்துவது என்பதுதான் திமுகவின் திட்டமாம். கடந்த காலங்களில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தது; வாசன் தலைமையிலான தமாகாவினரும் காங்கிரஸில் இருந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைப் 'பேரம்' பேசி பெறுகிற நிலை இருந்தது.
தீர்மானிக்கும் திமுக
ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து போயுள்ளது; திமுகவை விட்டால் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டு உள்ளதும் போச்சுடா என்ற நிலையில் அழிந்தே போய்விடும்; மேலும் காங்கிரஸுக்கு அதிக இடங்களைக் கொடுக்கப் போய் நாளை தேர்தலில் வென்றால் ஆட்சியில் பங்கு கேட்டு குடைச்சல் கொடுக்கலாம் என்பதால் இம்முறை தொகுதிப் பங்கீட்டில் திமுகவின் கை தான் ஓங்கி இருக்கும் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.