கருணாநிதி உடல்நிலை.. அதிர்ச்சி, துக்கத்தில் தொடரும் தீவிர தொண்டர்களின் மரணங்கள்
கருணாநிதி உடல்நிலை குறித்து தொண்டர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலகுறைவு குறித்து தகவல் அறிந்து துக்கம் தாங்காமலும் அதிர்ச்சியடைந்தும் தொண்டர்கள் ஆங்காங்கே உயிரிழந்து வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.
கருணாநிதியின் உடல்நலம் குறித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள அவரது தொண்டர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். இதனால் மனம் தாளாமல் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து சென்னை காவிரி மருத்துவமனைக்கும் வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

தூக்கு போட்டு தற்கொலை
இரு தினங்களுக்கு முன்பு கூட கருணாநிதியின் உடல்நிலை கேள்விப்பட்டு திருவாரூரில் திமுக நிர்வாகி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார், கோவையிலும் ஒரு தொண்டர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்தியை டிவியில் பார்த்துகொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதேபோல, சென்னை எண்ணூரிலும் திமுகவின் தீவிர தொண்டர் ஒருவர் துக்கத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனம் நொடிந்த பெரமி
இந்நிலையில், கிருஷ்ணகிரியிலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரமி என்பவர் துப்புரவு பணியாளராக உள்ளார். 55 வயதான பெரமி, தீவிரமான திமுகவின் ஆதரவாளர். கருணாநிதியின் உடல்நலம் குன்றி தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார் என்று கேள்விபட்டதிலிருந்தே பெரமி, மனம் நொடிந்து காணப்பட்டார்.

மயங்கி விழுந்த பெரமி
கருணாநிதி மருத்துவமனையில் அனுமதித்த நாளிலிருந்தே, அவரது உடல்நலம் தற்போது எப்படி உள்ளது என அப்பகுதி மக்களிடம் அடிக்கடி கேட்டு வந்தார். இதில் நேற்று முன்தினம் மாலை கருணாநிதி உடல்நிலை குறித்த வதந்தி காட்டுத்தீ போல் பரவியதால், அதிர்ச்சி அடைந்த பெரமி மயங்கி கீழே விழுந்தார். இதில் அந்த இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

மாரடைப்பால் மரணம்
இதேபோல, பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி. ஓய்வுபெற்ற ஆசிரியரான இவருக்கு வயது 60. கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரவிய தகவல்களை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, மாரடைப்பினால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

நிர்வாகிகள் நேரில் ஆறுதல்
இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக விசுவாசிகள் துக்கம் தாளாமலும், அதிர்ச்சியிலும் மரணடைந்தனர். உயிரிழந்த தொண்டர்கள், விசுவாசிகளுக்கு அந்தந்த மாவட்ட திமுக நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர். அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தும் ஆறுதல் கூறினர்.












Click it and Unblock the Notifications