மார்க்கண்டேய கட்ஜூ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்: தி.மு.க வலியுறுத்தல்
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது மீண்டும் மீண்டும் தனிநபர் விமர்சனத்தை முன்வைத்தால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மார்கண்டேய கட்ஜூவுக்கு தி.மு.க. எச்சரிக்கை விடுத்துள்ளது. மார்கண்டேய கட்ஜூ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தி.மு.க.வும், அதன் தலைமையும் தங்கள் (மார்க்கண்டேய கட்ஜூ) குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த பின்பும், திரும்பத் திரும்ப கட்சியின் தலைவர் கருணாநிதி குறித்த தனிநபர் தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
கருணாநிதி குறித்து தாங்கள் கூறியவற்றை வன்மையாக கண்டிக்கிறேன். அதற்காக நீங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.
திரும்பத் திரும்ப கருணாநிதியின் மீது தனிநபர் தாக்குதல் தொடுத்தும், அவதூறு கருத்துகள் பேசியும் வந்தால் உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.