அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விசிக பங்கேற்றால் வரவேற்போம்… டி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: காவிரி பிரச்சனை தொடர்பாக திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்றால் வரவேற்போம் என்று ராஜ்ய சபா உறுப்பினரும், திமுக செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
காவிரி பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனை அரசு செய்யவில்லை என்றால் எதிர்க்கட்சியான தாங்கள் செய்வோம் என்றும் கூறி வந்தார்.

இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாளை நடத்த திட்டமிட்டு, அனைத்துக் கட்சிகளுக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் மதிமுக, இரு கம்யூனிஸ்ட்கள், தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்தன.
ஆனால், மக்கள் நலக் கூட்டணியின் முக்கிய பங்கு வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக முடிவெடுக்க நிர்வாகிகள் கூட்டத்தை இன்று நடத்துகிறது. அதன் பின்னர், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கலந்து கொள்ளுமா இல்லையா என்பது தெரிய வரும்.
இந்நிலையில், திமுகவின் செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்பியுமான டி.கே.எஸ். இளங்கோவன், திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்றால் அதனை வரவேற்போம் என்றும், நடக்கவிருக்கும் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தலுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக ஒருங்கிணைக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் நேரடியாக புறக்கணிப்பாக அறிவித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் அப்படி அறிவிக்காமல் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க இருப்பது மக்கள் நலக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications