பினாமி அரசு தூக்கி எறியப்படும்.. திமுக ஆட்சி அமைந்ததும் ஜெ. மறைவு பற்றி நீதி விசாரணை: ஸ்டாலின்
திமுக ஆட்சி அமைந்ததும் முதல் அறிவிப்பாக, ஜெயலலிதா மறைவுக்கான காரணம் என்ன என்பது குறித்த நீதி விசாரணை அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: சட்டசபையில் சமீபத்தில் நடந்த களேபரத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று மாநிலம் முழுக்க உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார்.
இதையடுத்து உரையாற்றிய ஸ்டாலின் கூறியதாவது: ஜெயலலிதா மறைவு குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுள்ளார். அப்போது, எங்க அம்மாவின் உயிர்தான் எங்களுக்கு முக்கியம் என்று எடப்பாடி பழனிச்சாமி நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். 5 உத்தரவுகளுக்கு பழனிச்சாமி கையெழுத்திட்டார். அப்போது ஜெயலலிதா மறைவுக்கு காரணம் என்ன என்பதை கண்டறிய நீதி விசாரணைக்கு இன்னொரு கையெழுத்தையும் போட்டிருக்க வேண்டும்.
இந்த ஆட்சி நீடித்து நிலைத்து நிற்கும் ஆட்சி கிடையாது. எங்களால் மட்டுமல்ல, அனைவராலும் தூக்கி எறியப்படும் ஆட்சிதான் அதிமுக அரசு. திமுக அரசு அமைந்ததும், மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அரசு கொண்டுவரும். முதல் அறிவிப்பாக, முன்னாள் முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா மறைவுக்கான காரணம் என்ன என்பது குறித்த நீதி விசாரணை அமைக்கப்படும். அதை யாராலும் தடுக்க முடியாது. தடுக்கும் யோக்கியதை எவருக்கும் கிடையாது. விசாரணை நடந்த பிறகு யார் யாரெல்லாம் மாட்டுவார்கள், சிக்க இருக்கிறார்கள் என்பது அப்போது தெரியும்.
ஆட்சியை கலைக்க வேண்டும் என்று திமுக போராட்டம் நடத்தவில்லை. கலைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், ஜெயலலிதா மறைந்த உடனேயே, எங்கள் வேலையை ஆரம்பித்திருப்போம். ஒரு 20 எம்.எல்.ஏக்களை இந்த பக்கம் இழுத்து ஆட்சியை கலைத்துவிட்டிருக்கலாமே என்று மக்களே திமுகவை திட்டுகிறார்கள். ஆனால் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க அண்ணாவும், கலைஞரும் சொல்லித்தரவில்லை. மக்களை சந்தித்து, மக்கள் ஆதரவு மூலமாகவே திமுக ஆட்சிக்கு வரும்.