மாவட்ட செயலர்கள் 'கல்தாவுக்கு' காத்திருக்கும் உடன்பிறப்புகள்.. முட்டுக்கட்டை போடும் தளபதி!!
சென்னை: திமுகவில் மாவட்ட செயலாளர்களை மாற்றியே ஆக வேண்டும் என்று தலைவர் கருணாநிதியும் திமுக தொண்டர்களும் விரும்பினாலும் தளபதி ஸ்டாலின் முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளர்கள் நேர்காணல் முதல் அறிவிப்பு வரை எல்லாமே ஸ்டாலினின் கை தான் ஓங்கியிருந்தது. திமுக தலைவர் கருணாநிதி கூட தஞ்சாவூர் பழனி மாணிக்கம், வடசென்னை இளங்கோவன், திருவண்ணமலை கருணாநிதி, விருதுநகர் கே.எஸ். ராதாகிருஷ்ணனை நிறுத்தலாம் எனக் கூறியிருந்தார்.
நிராகரிக்கப்பட்ட கருணாநிதி சிபாரிசு
ஆனால் கருணாநிதியின் இந்த சிபாரிசில் வடசென்னையில் போட்டியிட வேண்டும் என்று விருப்பப்பட்ட இளங்கோவனை மட்டும் தென் சென்னைக்கு மாற்றினார் ஸ்டாலின். கருணாநிதி பரிந்துரைத்த எஞ்சியோருக்கே சீட்டு கிடைக்கவில்லை.
வேட்பாளர் பட்டியல் சர்ச்சை
இதைத்தான் அடிக்கடி மு.க. அழகிரியும் சுட்டிக்காட்டி வருகிறார். கருணாநிதி தலையீடு இல்லாத வேட்பாளர் பட்டியல்; கட்சிக்காக உழைத்தவர்கள் ஓரங்கட்டப்பாட்டார்கள் என்றெல்லாம் அழகிரி காட்டம் காட்டுகிறார்.
படுதோல்வி
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுக வெல்லாமல் போய்விட ஸ்டாலினுக்கு இயல்பாகவே நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முட்டுக்கட்டை மா.செக்கள்
திமுகவைப் பொறுத்தவரையில் முட்டுக்கட்டையே ஆண்டுக்கணக்கில் மாவட்ட செயலாளர்களாக இருப்பவர்கள். அவர்களை மாற்றி புதியவர்களை நியமித்தாலே போதும் என்கிற கருத்துதான் பொதுவான திமுகவினர் கருத்து.
ஸ்டாலின் அச்சம்
ஆனால் மாவட்ட செயலாளர்கள் தனது ஆதரவாளர்கள்.. அவர்களை வெளியேறினால் தனது பிடி தளர்ந்து போய்விடுமே என அஞ்சுகிறார் ஸ்டாலின் என்கிறார்கள். திமுக தலைவர் கருணாநிதியும் கூட மாவட்ட செயலாளர்களை மாற்றலாம் என விரும்பினாலும் ஸ்டாலின் முட்டுக்கட்டையாக இருக்கிறாராம்.
அனேகமாக ஸ்டாலினுக்கும் புரியவைத்து விரைவில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் அரங்கேறக் கூடும் என்று கூறப்படுகிறது.