திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்: கனிமொழி நம்பிக்கை !
தூத்துக்குடி: திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நம்பிக்கை தெரிவித்தார்.
தூத்துக்கடியில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்.பி.கனிமொழி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மதுவால் அரசுக்கு லாபமாக அல்லது அவர்களது மது நிறுவனங்களுக்கு லாபமா என்று கேள்வி எழுப்பினார்.
மது விற்பனையால் கிடைக்கும் 30 ஆயிரம் கோடி ரூபாயை இழக்க அதிமுக அரசு தயாராக இல்லை என்று கனிமொழி குற்றம்சாட்டினார். மக்கள் நலனில் அரசு அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றுகூறிய அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கருணாநிதி நிச்சயம் மதுவிலக்கை கொண்டுவருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் மரணம் தொடர்பாக உண்மையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் தூத்துக்குடி பகுதி மக்கள் இந்த பகுதியில் உள்ள குளங்களை தூர்வார கோரி தம்மிடம் மனு அளித்ததாகவும், அந்த பணியை மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதி தரவில்லை என்றும் இங்கு நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு அரசும் அதிகாரிகளும்தான் காரணம் எனவும் கூறினார்.