மதுரை மாவட்டத்தில் திமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது.. அழகிரி ஆவேசம்
மதுரை: சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் வாக்களிக்க போவதில்லை என்றும், மதுரை மாவட்டத்தில் திமுக அனைத்து தொகுதிகளிலும் தோற்கப்போவதாகவும், திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளவரும், முன்னாள் அமைச்சருமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.
2011ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் காட்சிகளுக்கும், இப்போதைய காட்சிகளுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கிறது மதுரை வட்டாரத்தில்.
கடந்த தேர்தலில் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் பம்பரமாய் சுழன்று திமுகவுக்காக தேர்தல் பணியாற்றினார் அழகிரி. திருமங்கலம் இடைத்தேர்தலில் அழகிரி பயன்படுத்திய விட்டமின் எம் ஃபார்முலா, கருணாநிதியையே கவர்ந்திருந்ததால் அழகிரிக்கு ஏகப்பட்ட சுதந்திரம் வழங்கப்பட்டது.
ஓய்வு
இப்போது நிலைமை தலைகீழ். கடந்த வாரம், ராகுல் காந்தி, ஸ்டாலின் ஒரே மேடையில் அமர்ந்து மதுரையில் பிரசாரம் செய்தபோது, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தனது பங்களாவில் ஓய்வெடுத்தபடி டிவியை பார்த்துக் கொண்டிருந்தாராம் அழகிரி.
அன்றாட வழக்கம்
காலை 7 மணிக்கு வாக்கிங் செல்லும் அழகிரி, பின்னர் செய்தித்தாள்களை வாசிக்கிறார். அதன்பிறகு மாலை 6 மணிவரை தொடர்ந்து நண்பர்களையும், ஊர் மக்களையும், திமுக விசுவாசிகளையும் தனது இல்லத்தில் வைத்து அவர் சந்தித்து பேசுகிறார். இரவு நேரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசிக்கிறாராம்.
ஜெயலலிதா தாக்கு
கடந்த சட்டசபை தேர்தலில் மதுரையில் பிரசாரம் செய்ய வந்த ஜெயலலிதா, மதுரையில் குண்டர்களின் ஆட்சியை ஒழித்து, கட்டப்பஞ்சாயத்து, நடமாடும் சட்ட விரோத நீதிமன்றங்களை ஒடுக்கி சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்த உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. திமுகவை தூக்கி எறியுங்கள் என்று பிரசாரம் செய்தார்.
ஸ்டாலினும் தாக்கு
இப்போது ஸ்டாலினும், திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்தை ஒழிப்போம், ரவுடிகளை தலையெடுக்க விடமாட்டோம், என்று மதுரையில் நின்றபடி, பிரசாரம் செய்ததை நமட்டு சிரிப்போடு டிவியில் பார்த்தாராம் அழகிரி.
முடியவில்லை
கட்சியில் இருந்து நீக்கி கடந்த 2 ஆண்டுகளாக ஓரம் கட்டப்பட்டுள்ள அழகிரி, சமீபத்தில் கருணாநிதியை சந்தித்து பேசி கட்சியில் கரைந்துவிட முயன்றார். ஆனால் இளையவர் ஸ்டாலின் நந்தியாய் குறுக்கே நிற்க, கருணாநிதியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
முதல்வர் ஆசை பணால்
தனக்கு இயற்கையாய் ஏதாவது நேர்ந்தால், அதன்பிறகு ஸ்டாலின் முதல்வராவார் என்று கருணாநிதியே வாய் மொழி ஒப்புதல் கொடுத்துள்ளதால், அடுத்த முதல்வர் என்ற கனவும் அழகிரிக்கு கலைந்து விட்டது.
விரக்தி பேட்டி
இந்த நிலையில், மதுரையில் இருந்தபடி ஆங்கில பத்திரிகையொன்றுக்கு தொலைபேசி வழியாக பேட்டியளித்துள்ளார் அழகிரி. அந்த பேட்டியில் தனது விரக்தியை வார்த்தைகளில் வடித்துள்ளார்.
பேசவேயில்லங்க
அழகிரி கூறியுள்ளதாவது: நான் ஸ்டாலின், கனிமொழி போன்றோரிடம் பேசி குறைந்தது 3 வருடங்களாவது இருக்கும். எதற்காகவும், அவர்களுடன் பேச வாய்ப்பு வரவில்லை.
திமுகவுக்கு தோல்வி
என்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது திமுகவுக்கு தெரியவில்லை. எனவே அக்கட்சிக்கு குறித்து அதிகமாக கருத்து கூற விரும்பவில்லை. மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறப்போவதில்லை என்பது மட்டும் தெரிகிறது.
ஓட்டே போடமாட்டேன்
நான் வரும் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் வாக்களிக்க போவதில்லை. இவ்வாறு அழகிரி கூறியுள்ளார். அழகிரி வாக்களிக்க வரும்போது, வாக்குச்சாவடிக்கு சென்று கிளிக் செய்யலாம் என்று காத்திருக்கும் பத்திரிகையாளர்கள் கேமராக்கள் ஓய்வெடுக்கலாம் என்பது மட்டும் அவரது பேட்டியில் இருந்து உறுதியாக தெரிகிறது.