கருணாநிதியின் உடல்நிலையில் நாளுக்கு நாள் முன்னேற்றம்.. உற்சாகத்தில் தொண்டர்கள்!
2ஜி தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக வந்திருப்பது அக்கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: 2ஜி தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக வந்திருப்பது அக்கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீர்ப்பைக் கேட்டவுடன் திமுக தலைவர் கருணாநிதி உடன் இருந்தவர்களின் கையை பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கருணாநிதியின் உடல்நிலையில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்திய அரசியல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேசப்பட்டு வந்த வார்த்தை 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு. சுமார் 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்ததாக கனிமொழி எம்பி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்து.
இந்த புகார் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரிதும் பேசப்பட்டது. இதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்தது.

திமுகவினர் மகிழ்ச்சி
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய டெல்லி பாட்டீயாலா நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு காங்கிரஸ் மற்றும் திமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கையை இறுகப்பிடித்த கருணாநிதி
திமுகவுக்கு ஆதரவாக வந்துள்ள இந்த தீர்ப்பை அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலளார் பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் கருணாநிதியிடம் தீர்ப்பு குறித்து தெரிவித்தனர். இதனை கேட்ட கருணாநிதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் இருவரின் கையையும் இறுக பிடித்துள்ளார்.

அநீதி வீழும் அறம் வெல்லும்
மேலும் தீர்ப்பு குறித்து அநீதி வீழும் அறம் வெல்லும் என்றும் கருணாநிதி தனது கைப்பட எழுதி கையெழுத்திட்டுள்ளார். உடல்நலக்குறைவால் கடந்த ஓராண்டாக பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கையசைத்த கருணாநிதி
அண்மையில் முரசொலி பவளவிழா புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்ட கருணாநிதி தொண்டர்களை பார்த்து கையசைத்தார். பின்னர் தனது வீட்டிற்கு வந்த பிரதமர் மோடியை சந்தித்த அவர் வாசல் வரைவந்து தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

கண்ணீர்விட்ட கருணாநிதி
கடந்த வாரம் அறிவாலயத்துக்கு சென்ற அவர் அங்கிருந்த கையேட்டில் கையெழுத்திட்டார். பின்னர் அங்கிருந்து புறப்படும் போது கண்ணீர்விட்ட அவர் கர்ச்சிப்பால் அதனை துடைத்துக்கொண்டார். கருணாநிதியின் உடல்நிலையில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications