குன்னூர் விபத்து: சுற்றுலா பயண திட்டம் தெரியுமா?.. அக்டோபர் 1ஆம் தேதி எங்கிருக்க வேண்டும்?
தென்காசி: குன்னூரில் கொண்டை ஊசி வளைவில் பேருந்து விபத்துக்குள்ளாகி 9 பேர் பலியான நிலையில் நேற்றைய தினம் சுற்றுலா திட்டத்தின் படி அவர்கள் வீடு போய் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுடைய உடல் மட்டுமே கடையம் சென்றதால் அங்கு சோகமான சூழல் எழுந்துள்ளது.
அவர்களுடைய 3 நாட்கள் சுற்றுலா திட்டம் குறித்து புதிய தலைமுறைக்கு கிடைத்த பிரத்யேக தகவலில் கூறியிருப்பதாவது: அன்பு இன்ப சுற்றுலா என்ற பெயரில் கீழ்க்கடையத்தை சேர்ந்த அன்பு என்பவர் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த 3 நாட்கள் சுற்றுலாவுக்கு தங்குமிடத்தை சுற்றுலா பயணிகளே பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு ரூ 1600 வசூலிக்கப்படுகிறது. குழந்தைகள் 3 வயது முதல் 10 வயது வரை அரை கட்டணமாக ரூ 800 வசூலிக்கப்படுகிறது. 3 நாட்கள் சுற்றுலா பயணமாக கடந்த 29ஆம் தேதி கடையத்தில் இருந்து பேருந்து புறப்பட்டுள்ளது. அங்கிருந்து நேராக சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில், கொச்சி கடற்கரை, கொடுங்கலூர் மாரியம்மன் கோயில் மற்றும் குருவாயூருக்கு சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் தங்கிய அவர்கள் அங்கிருந்து ஊட்டிக்கு சென்று அங்குள்ள தாவரவியல் பூங்கா உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 30 ஆம் தேதி கோவை மாவட்டம் மருதமலைக்கு செல்ல விருந்தனர். ஆனால் அதற்குள் விபத்து நிகழ்ந்துவிட்டது. குன்னூர் - மேட்டுப்பாளையம் செல்லும் போது 9ஆவது கொண்டை ஊசி வளைவில் பேருந்து திரும்பும் போது பிரேக் பிடிக்காமல் பள்ளத்தில் கவிழ்ந்து 9 பேர் பலியாகிவிட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஓரிருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. சுற்றுலா திட்டத்தின்படி கோவை மருதமலைக்கு சென்றுவிட்டு அக்டோபர் 1 ஆம் தேதி மாசாணியம்மன் கோயில், பழனி, மதுரை திருப்பரங்குன்றம் சென்றுவிட்டு நேராக கடையம் செல்வதுதான் இவர்களுடைய பிளானாக இருந்தது. ஆனால் நேற்றைய தினம் இந்த கோர விபத்தால் 9 பேர் வீடு திரும்பாமல் அவர்களுடைய உடல் மட்டும் சென்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில் விபத்தில் காயமடைந்த செல்லம்மாள் என்பவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருடைய முதுகெலும்பு, விலா எலும்புகளில் பலத்த காயம் ஏற்பட்டு மூச்சு விடவே சிரமப்பட்டு வருகிறார். அது போல் முப்பிடாத்திக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications