Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போகாதீங்க! "டாக்டரே இல்ல" போஸ்டர் ஒட்டிய போலீஸ்காரர்! பரபரத்த தென்காசி

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் டாக்டர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, சிகிச்சைக்கு தேவையான உபரகரணங்கள் இல்லை. எனவே இந்த ஆஸ்பத்திரிக்கு யாரும் போகாதீங்க என்று போலீஸ்காரர் ஒருவர் அந்த மருத்துவமனை முன்பே போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் தாலுகாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வலியில் துடித்த தன் மனைவியை அனுமதித்த போது அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் இருந்தும் சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டதால், தென்காசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று மருத்துவர்கள் அலட்சியமாக பதில் கூறினார்களாம்.

Tenkasi Government Hospital Alankulam

இதனால், கோபம் அடைந்த பெண்ணின் கணவரும் திருவேங்கடத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவருமான பிரபாகரன் என்பவர் தனது எதிர்ப்பை தெரிவிக்க அந்த ஆஸ்பத்திரி முன் வாசலில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளாராம். இது பற்றிய விவரத்தை இங்கே பார்க்கலாம்.

போலீஸ்காரர்: தென்காசி மாவட்டம் திருவேங்கடம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பிரபாகரன் (வயது 32). இவர் ஆலங்குளம் நத்தம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவரது மனைவி பிளஸ்ஸி (29). பிரபாகரன் - பிளஸ்ஸி தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிளஸ்ஸி 3-வதாக கர்ப்பமாக இருந்தார்.

பிரசவ வலி: இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ்ஸிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் அலறி துடித்துள்ளார். இதையடுத்து பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக பிளஸ்ஸியை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடனடியாக அங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று நினைத்த பிரபாகரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சிகிச்சை அளிக்கவில்லை: பிரசவ வலியால் பிளஸ்ஸி துடித்துக்கொண்டிருக்க டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் இருந்தும் நீண்ட நேரமாக சிகிச்சை அளிக்காமல் இருந்தனர். இப்போது சிகிச்சையை தொடங்கிவிடுவார்கள் என்று நினைத்து போலீஸ்காரர் பிரபாகரனும் நீண்ட நேரமாக காத்திருந்தார். ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர்கள் சிகிச்சை மேற்கொள்ளவில்லை. இதனால் டாக்டர்களிடம் இதுபற்றி கேட்டுள்ளார்.

வாக்குவாதம்: அப்போது டாக்டர்கள் பிளஸ்சிக்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டுவிட்டது. இதனால் தென்காசி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக செல்லுமாறு கூறியுள்ளனர். இதனை முதலிலேயே சொல்லியிருந்தால் நாங்கள் அங்கே கொண்டு சென்றிருப்போமே என்று டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து தென்காசி அரசு மருத்துவமனையில் மனைவியை சிகிச்சைக்காக சேர்த்தார்.

போஸ்டர் அடித்து ஒட்டினார்: அங்கு ஆஸ்பத்திருக்கு சென்ற 15வது நிமிடத்திலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர். இந்த நிலையில் தான் பாதிக்கப்பட்டது போன்று வேறு யாரும் இனி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், தனது எதிர்ப்பை காட்டவும் போலீஸ்காரர் பிரபாகரன் மருத்துவமனையில் உள்ள அவல நிலைகளை வாசகங்களுடன் எழுதி போஸ்டர் அடித்து அந்த ஆஸ்பத்திரி முன்பே ஒட்டியுள்ளார்.

போலீசார் விசாரணை: அந்த போஸ்டரில், முக்கிய அறிவிப்பு.. ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் பேறுகாலத்திற்கு கர்ப்பிணி பெண்களை யாரும் சேர்க்க வேண்டாம். பிரசவம் பார்ப்பதற்கு இந்த மருத்துவமனையில் வசதிகளும் இல்லை, டாக்டர்கள் இல்லை... செவிலியர்களும் இல்லை" என்று கூறப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் அந்த ஆஸ்பத்திரியை கேட் முன்பு ஒட்டப்பட்டிருந்தது.

மேலும் போலீஸ்காரர் பிரபாகரன் இது தொடர்பாக ஆலங்குளம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்பத்திரி முன்பு ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டரை பார்த்து சென்ற அந்த ஊர் மக்கள் ஆஸ்பத்திரியின் அவலை நிலையை கண்டு வேதனையடைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+