டிடிவி தினகரனை தாங்கிப் பிடிக்கும் நமது எம்ஜிஆர், ஜெயாடிவி - ஆபரேசனில் அமைதியான அமைச்சர்கள்
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக கைதாகியுள்ள டிடிவி தினகரனை நமது எம்ஜிஆர் நாளேடும், ஜெயாடிவியும் தாங்கி பிடிக்கிறது.
சென்னை: இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவின் நமது எம்ஜிஆர் நாளேட்டிலும், ஜெயா டிவியிலும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
அதிமுகவில் இருந்து விலகிவிட்டதாக டிடிவி தினகரன் கூறினார். அதிமுகவிற்கும் டிடிவி தினகரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர்கள் சிலர் கூறினர். ஆனால் அதிமுகவின் ஊடகங்களில் டிடிவி தினகரனுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதற்குக் காரணம் மன்னார்குடி குடும்பத்திற்கு ஆதரவானவர்களை திட்டமிட்டு ஊடகங்களில் பணிக்கு அமர்த்தியதுதான் என்கின்றனர்.
அமைச்சர்கள் மவுனம்
டிடிவி தினகரன் குற்றமற்றவர் என்று நிரூபித்து அவர் விரைவில் இந்த வழக்கில் இருந்து மீண்டு வருவார் என்று செய்திகள் வெளியிடப்படுகின்றன. டிடிவி தினகரனுக்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய அமைச்சர்கள் தற்போது மவுனம் காத்து வருகின்றனர்.
ரொம்ப முக்கியம்
அதிமுகவில் டிடிவி தினகரனும், சசிகலாவும் மிகவும் முக்கியம் என்றும் அவர்கள் இல்லாவிட்டால் கட்சியே இல்லை என்பது போலவும் ஆதரவான பேட்டிகள் அடிக்கடி ஒளிபரப்பப்படுகின்றன.
தியாகியான தினகரன்
அதிமுகவில் இருந்து விலகிவிட்டதாக தினகரன் கூறிய நாளில் இருந்தே அவரை தியாகியாக கூறி செய்திகள் வெளியிட்டு வந்தது நமது எம்ஜிஆர் நாளேடு. இதுவே இரு அணிகளின் இணைப்பிலும் சிக்கலை ஏற்படுத்தியது.
நாஞ்சில் சம்பத்
தினகரனின் கைதுக்குப் பிறகு டிடிவி தினகரனின் புகழ் பாட நாஞ்சில் சம்பத் போல சிலரை பேச வைத்து பேட்டி ஒளிபரப்பாகிறது. இதன் பின்னணியில் டிடிவி தினகரனின் மனைவி அனுராதாதான் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நமது எம்ஜிஆர் நாளிதழ்
இன்றைய இதுவும் கடந்து போகும் என்ற தலைப்பில் சோழ அமுதன் எழுதியுள்ள கட்டுரையில் சரபோஜி மன்னர் காலத்தில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு அப்போது தூது சென்ற எலேலசிங்கனார் புலவர் பற்றியும் எழுதியுள்ளனர். தஞ்சை மீது போர் தொடுக்க நினைத்த சேர மன்னனிடம் தூது சென்றார் ஏலேலசிங்கனார். சேர நாட்டின் உணவுப் பஞ்சத்தை போக்க தஞ்சையால் முடியும் என்று சமாதானம் பேசி அழைத்து வந்தார் புலவர். அதுபோல தற்போதய அரசியல் சூழல் நிலவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது நமது எம்ஜிஆர் நாளேடு கட்டுரை.
டிடிவி தினகரன் சரபோஜி மன்னனா?
இதில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தால் டிடிவி தினகரன் சரபோஜி மன்னன் போலவும், ஓபிஎஸ் அணி சேர மன்னன் போலவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. தனக்கு ஆதரவு தராவிட்டால் ஆட்சியை கவிழ்க்கவும் தயாராகிவிட்டாராம் டிடிவி தினகரன்.
ஆபரேசன் தினகரன்
அதிமுகவில் இருந்து விலகிவிட்டதாக கூறினாலும் தனது ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து இப்போது சடுகுடு ஆடி வருகிறார் டிடிவி தினகரன். செந்தில் பாலஜி, தங்கத்தமிழ் செல்வன் ஆகியோரை கொம்பு சீவி விடுவதும் அதனால்தானாம். விடாப்பிடியாக அமைச்சர்களுக்கு எதிராக சில எம்எல்ஏக்கள் பேட்டி தருவதற்கும் இதுதான் காரணம். எது எப்படியோ டிடிவி தினகரன் ஆபரேசனால் அல்லோல கல்லோல படுவது அதிமுகவும், அவரது தொண்டர்களும்தான்.