ஜெயலலிதா வழிநடத்தும் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: ராமதாஸ்
சென்னை: ஜெயலலிதா வழிநடத்தும் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 6 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு அரசு உடனடியாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. நடப்பாண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 2603 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன; 333 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு குழந்தையும், 3 பெண்களும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி சீரழிக்கப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு உளப்பூர்வமாக எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், அலட்சியம் காட்டுவது தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதற்கு மிக முக்கிய காரணம் ஆகும்.மொத்தத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்றார்.
ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது என்று கூறிய ராமதாஸ், உடனே சுதாரித்துக் கொண்டு, பன்னீர் செல்வம் ஆட்சி நடத்தினாலும் வழிநடத்துவது ஜெயலலிதானே என்று கூறி சமாளித்தார்.
தொடர்ந்து பேசிய டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் போதை பழக்கமே இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்க காரணமாகிவிட்டது. டாஸ்மாக் மதுவிற்பனையை அதிகரிக்கத்தான் இலக்கு நிர்ணயிக்கின்றனர். ஆனால் வளர்ச்சி பணிகள் எதையும் செயல்படுத்தக் காணோம் என்றார்.
மேலும், மதுரையில் உள்ள கிரானைட் குவாரிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தினார்.
2016ல்பாமக தலைமையில் கூட்டணி
இதனைத் தொடர்ந்து 2016 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பற்றி பேசிய டாக்டர் ராமதாஸ், வாக்குகளை விலைக்கு வாங்கும், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேருவது வெட்கக் கேடானது என்றார்.
2016 சட்டமன்ற தேர்தலில், திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி வைப்பது அவமானகரமான செயல் என்று தெரிவித்த டாக்டர் ராமதாஸ், பாமக தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications