செங்கை கோர்ட்டில் ராமதாஸ்.. திருவண்ணாமலை கோர்ட்டில் எ.வ.வேலு.. விழுப்புரத்தில் பொன்முடி ஆஜர்
செங்கல்பட்டு: முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் இன்று பல்வேறு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்களில் ஆஜராகினர்.
இதன் காரணமாக இந்த கோர்ட்டுகளில் இவர்களின் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
ராமதாஸ் வருகையையொட்டி செங்கல்பட்டு கோர்ட்டில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சித்திரை முழு நிலவு
மாமல்லபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சித்திரை முழுநிலவு வன்னியர் திருவிழா நடைபெற்றது. இதில் இரவு 10 மணிக்கு மேல் பேசியதாக டாக்டர் ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நிபந்தனை ஜாமீன்
இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற ராமதாஸ் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஒருவாரம் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அப்பீல்..ஒரு நாள் ஓ.கே...
இதனை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி செங்கல்பட்டு கோர்ட்டில் ஒரு நாள் மட்டும் ஆஜராகி கையெழுத்து போட்டால் போதும் என உத்தரவிட்டார்.

மாஜிஸ்திரேட் மகாலட்சுமி முன்பு ஆஜர்
இதையடுத்து இன்று காலை செங்கல்பட்டு முதன்மை கோர்ட்டில் நீதிபதி மகாலட்சுமி முன்பு டாக்டர் ராமதாஸ் ஆஜராகி கையெழுத்து போட்டார்.

திருவண்ணாமலையில் வேலு
அதேபோல திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் திருவண்ணாமலை குற்றவியல் கோர்ட்டில் இன்று ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.

மனைவியுடன் ஆஜர்
அதன்படி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மனைவி ஜீவாவேலு ஆகியோர் இன்று காலை 10.30 மணியளவில் திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நீதிபதி குருமூர்த்தி முன்னிலையில் ஆஜராகினர்.வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை வருகிற 13-ந் தேதி மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

விழுப்புரத்தில் பொன்முடி
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2002-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மனைவியுடன் ஆஜரான பொன்முடி
இன்று அந்த கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது. பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜரானார்கள். அரசு வக்கீலும் பொன்முடி தரப்பு வக்கீல் சுப்பிரமணியமும் ஆஜராகி ஒரு மணி நேரம் வாதம் செய்தனர்.

12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
நீதிபதி சுந்தரமூர்த்தி விசாரித்து இந்த வழக்கு விசாரணையை ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். இதேபோல் 2011-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றொரு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையும் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

2வது வழக்கு
பொன்முடி, அவரதுமனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜரானார்கள். இந்த வழக்கு விசாரணையையும் ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி சுந்தரமூர்த்தி உத்தரவிட்டார்.

3வது வழக்கு
3வதாக, வானூர் அருகே பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி அரசு இழப்பீடு செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் பொன்முடி, கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபி, லோகநாதன், சதானந்தம் உள்பட 6 பேர் ஆஜரானார்கள். மீதி 2 பேர் ஆஜராகவில்லை. நீதிபதி வெற்றிச்செல்வி விசாரித்து இந்த வழக்கை ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications