கன மழையால் பாதிப்பு... 50% டிஸ்கவுண்ட் கேட்டு உண்ணாவிரதம் இருக்கப்போகும் ‘குடி’மகன்கள்
சென்னை: கனமழையால் வேலைக்குச் செல்ல முடியாமலும், வருமானத்திற்கு வழியில்லாமலும் இருப்பதால் மதுவை சலுகை விலையில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கனமழையின் பாதிப்பில் இருந்து சென்னை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. வீடுகளை விட்டு வெளியேறியோர் மீண்டும் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய அரசு என்னவிதமான நிவாரண உதவியைச் செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரது மனதிலும் உள்ளது. இந்நிலையில் ‘குடி'மகன்களின் சார்பில் வித்தியாசமான கோரிக்கை ஒன்று முன்வைக்கப் பட்டுள்ளது.
வேலைக்குப் போக முடியலை...
அதாவது கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதால் மது பிரியர்களால் வேலைக்கு செல்ல இயலவில்லையாம். வருமானத்திற்கு வழியில்லாததால் சரக்கு வாங்க மிகவும் கஷ்டப்படுகிறார்களாம்.
மது குடிக்கவும் வழியில்லை...
எனவே, கூலி வேலைக்கு போக முடியாமல் குவாட்டர் வாங்க வழியில்லாமல் சுமார் ஒரு கோடி ‘குடி' மகன்கள் கஷ்டப்படுகிறார்களாம். எனவே, வரும் டிசம்பர் மாதம் முழுவதும் மதுபானங்களை 50 சதவீத விலை குறைத்து டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அம்பத்தூரில் உண்ணாவிரதம்...
இதை வலியுறுத்தி வரும் 7ம் தேதி அம்பத்தூரில் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைவர் சொல்வதைக் கேளுங்க...
இது தொடர்பாக "ஒன் இந்தியா-தமிழ்" செய்தியாளர், தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது, அவர் பின்வருமாறு தன் ஆதங்கங்களைக் கொட்டினார்.
செவ்வனே குடித்து..!
"ஆண்டுதோறும் செவ்வணே குடித்து அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் குடிமகன்களுக்காக இந்த உதவியையாவது அரசு செய்யக்கூடாதா? கடந்த மாதம் தீபாவளி சமயத்தில் மட்டும், ரூ. 400 கோடிக்கு மேல் டாஸ்மாக்கிற்கு வருமானம் பெற்றுத் தந்துள்ளோம்.
கை காலெல்லாம் நடுங்குதுய்யா!
ஆனால், தற்போது மது குடிக்க காசில்லாமல், கை, கால்கள் நடுங்கும் நிலையில் பரிதவித்து வருகிறோம். எனவே அரசு எங்களுக்காக பொங்கல் வரை மது விலையைப் பாதியாகக் குறைத்து விற்பனை செய்ய வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.
குடிப்போருக்கு புனரமைப்பு.. குடிக்காதவர்களுக்கு பாதுகாப்பு இது தான் அந்த சங்கத்தின் தாரக மந்திரமாம்!