கழுத்து வரை தண்ணீர் ஓடுது.. குடிக்க ஒரு சொட்டு தண்ணியில்லை
சென்னை: சென்னையில் கனமழை, சென்னையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் என்று செய்திகளில் பார்த்தவர்களுக்கும், பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்தச் செய்தி நிச்சயம் அதிர்ச்சியை அளிக்கும்.
அப்படி என்ன செய்தி என்கிறீர்களா? சென்னையில் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி மக்கள் தவித்துக் கொண்டு இருப்பதுதான். வரலாறு காணாத அளவு மழை என்று மார்தட்டிக் கொண்டாலும் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி சென்னை மக்கள் தவித்து வருவதுதான் உண்மையாக இருக்கிறது.
கேன் பாட்டில்கள் சப்ளை இல்லாதது மற்றும் தண்ணீர் லாரிகள் செல்ல முடியாத சூழ்நிலை போன்றவையே மக்களின் இந்தத் தவிப்பிற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

வழக்கத்தை விட
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழையை விட சுமார் 89 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கருத்துத் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத பேய்மழையால் சென்னை மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருகின்றனர். ரோட்டில் மட்டுமல்ல வீடுகளில் கூட கழுத்தளவுக்கு மேலே தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.

குடிக்கத் தண்ணீர் இல்லையே
இந்நிலையில் தற்போது குடி தண்ணீர்ப் பஞ்சம் சென்னை மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது.மழை நின்றும் ஆங்காங்கே தண்ணீர் வெள்ளமெனப் பெருக்கெடுத்து ஓடுவதால் குடிதண்ணீரை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. கேன் பாட்டில்கள் சப்ளை இல்லாத நிலையும், தண்ணீர் லாரிகள் செல்ல முடியாத சூழ்நிலையும் ஒன்றிணைந்து கொண்டதில் குடிக்கும் தண்ணீர் மக்களுக்கு கிடைக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

தண்ணீர் பாட்டில்கள்
கடைகளில் குடிதண்ணீர் கேன்கள் சப்ளை இல்லாத காரணத்தால் மக்கள் வேறு வழியின்றி 1 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை உள்ள தண்ணீர் பாட்டில்களை கொள்ளை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

அதற்கும் வழியில்லை
தற்போது தண்ணீர் பாட்டில்களும் விரைவாக விற்றுத் தீர்ந்த சூழ்நிலையில், கடையில் தண்ணீர் இல்லை வரும்வரை காத்திருங்கள் என்று கடைக்காரர்கள் மக்களிடம் சொல்லுவதைக் கேட்க முடிகிறது.

மெட்ரோ வாட்டர்
மெட்ரோ தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கலாம் என்றாலும் மழை காரணமாக சாக்கடை மற்றும் கழிவு நீர்கள் கலக்கும் அபாயம் இருப்பதால் அதற்கும் வழியில்லை.இதனால் தற்போது குடிதண்ணீர் கிடைக்கும் வரை காத்திருக்கும் நிலைக்கு சென்னை மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
கழுத்து வரை தண்ணீர் ஓடினாலும், குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்பதே சென்னைவாசிகளின் தற்போதைய அங்கலாய்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications