தமிழகம் முழுவதும் வறட்சி.. அமைச்சர்கள், ஆட்சியர்கள் ஆய்வு… எப்போ சொல்வார்கள் தீர்வு
வறட்சி பாதித்தப் பகுதிகளை அமைச்சர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கான தீர்வை தமிழக அரசு எப்போது அறிவிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் விவசாயகள் காத்திருக்கின்றனர்.
திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி நாசமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகளை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததாலும், பருவ மழை பொய்த்துப் போனதாலும், தமிழகம் வறட்சி பூமியாகிவிட்டது. உரிய நீர் இல்லாமல் நெல், கரும்பு, சோளம் என அனைத்துப் பயிர்களும் கருகி நாசமாகின. இதனைக் கண்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்தும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் வறட்சிப் பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார். எனினும் மரணம் அடைந்த விவசாயிகளுக்கான நிவாரணம் குறித்து எதுவும் கூறவில்லை.
இந்நிலையில், இன்று அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர்கள் என அனைவரும் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் பகுதியில் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் வினய், எம்எல்ஏ பரமசிவம், எம்பி உதயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதே போன்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரம், வாடிப்பட்டி, ரெங்கநாதபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், வருவாய் அலுவலர், வேளாண்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் வறட்சி பாதிப்புகள் குறித்து அமைச்சர் காமராஜுடன் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்கள்.