போதை மாணவரைத் தட்டிக்கேட்ட ஆசிரியருக்கு ‘பைக் சாவி’ குத்து: 2 மாணவர்கள் சஸ்பெண்ட்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்லுரி ஒன்றில் மது அருந்தி விட்டு போதையில் வகுப்பிற்கு வந்த மாணவனை கண்டித்த துறைத்தலைவரை சம்பந்தப் பட்ட மாணவன் அவனது நண்பனோடு சேர்ந்து பைக் சாவியால் குத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை அடுத்த பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள என்.ஜி.எம். என்ற தனியார் கல்லூரியில் ஐ.டி. துறைத்தலைவராக பணி புரிந்து வருபவர் சின்னாம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார்.
அக்கல்லூரியில் ஐ.டி. பிரிவு மாணவர் நவீன் என்பவர் அடிக்கடி மது போதையில் வகுப்பிற்கு வருவதாக மற்ற மாணவர்கள் குற்றஞ்சாட்டி வந்துள்ளனர். இதனால் நவீனை பலமுறை பேராசிரியர்கள் மற்றும் துறைத்தலைவர் எச்சரித்தனர். எனினும் அதனை பொருட்படுத்தாது நவீன் தொடர்ந்து வகுப்புக்கு ஒழுங்கீனமாக வந்துள்ளார்.
சம்பவத்தன்றும் நவீன் மதுபோதையில் வகுப்புக்கு வந்ததையடுத்து துறைத் தலைவர் விஜயகுமார், அம்மாணவனை அழைத்து கல்லூரிக்கு ஒழுங்கீனமாக வருவதால் உன்னை சஸ்பெண்டு செய்யப் போகிறேன் என எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நவீன், தனது வகுப்புத் தோழன் ஜெயப்பிரகாஷ் உதவியோடு விஜயகுமாரைத் தாக்க திட்டமிட்டுள்ளான். அதன்படி, சாப்பிட புறப்பட்ட விஜயகுமாரை, ஜெயபிரகாஷ் பின் பக்கமாக இறுக்கி பிடித்துக்கொள்ள, நவீன் தான் வைத்திருந்த பைக் சாவியை எடுத்து துறைத்தலைவர் விஜயகுமாரின் தலையில் குத்தியுள்ளான்.
இதில் காயமடைந்த விஜயகுமாரை உடனடியாக மீட்டு மருத்துவனையில் சேர்த்துள்ளனர் பிற ஊழியர்கள். அதற்குள் நவீனும், ஜெயபிரகாசும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்கள்.
துறைத்தலைவரை மாணவர்களே தாக்கிய இந்தச் சம்பவத்துக்கு மற்ற ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் நவீனும், ஜெயபிரகாசும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார், தப்பியோடிய மாணவர்களைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications