இனி வீட்ல எப்பவுமே தக்காளி சாதம், தக்காளி சட்னி தான்... விலை 10 நாளில் சர்ர்ர்...!
தக்காளியை சமையலில் சேர்க்க வேண்டுமா என்று எண்ணிய இல்லத்தரசிகளின் கவலை போக்கும் விதமாக 10 நாட்களில் விலை ரூ. 15ஐ எட்டியுள்ளது.
சென்னை: தக்காளியின் விலை 10 நாட்களுக்கு முன்பு வரை ரூ. 50 வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை கடுமையான வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நவம்பர் மாதத்தில் பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை மொத்த வியாபாரத்தில் ரூ. 40 என்றும் சில்லரை விற்பனையில் ரூ. 50 முதல் 65 வரை தாறுமாறாகவும் விற்கப்பட்டது. இதனால் தக்காளியை சமையலில் சேர்க்கலாமா வேண்டாமா என்று இல்லத்தரசிகள் பார்த்து பார்த்து பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் மழையில் இருந்து தப்பி தக்காளி விவசாயம் மீண்டுள்ளதால் தக்காளி உற்பத்தியானது 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் தக்காளியின் விலை 10 நாட்களுக்கு முன்னர் ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ. 15க்கு விற்கப்படுவதாக கோயம்பேடு வணிக வளாக வர்த்தக சங்கத்தை சேர்ந்த சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
90% பேர் தக்காளி விவசாயத்திற்கு மாறினர்
ஈரோடு பகுதிகளில் 90 சதவீதம் விவசாயிகள் தக்காளி விளைச்சலுக்கு மாறியுள்ளதால் உற்பத்தி அதிகரித்துள்ளதாக விவசாய சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். சேலம் மாவட்டம் மேச்சேரி மற்றும் வாழப்பாடியும், கிருஷ்ணகிரி மாவட்டம் ரோயக்கோட்டையும் தான் தமிழகத்தில் தக்காளி விவசாயத்திற்கு பெயர் போன இடம்.
அதிகம் பேர் ஆர்வம்
இங்கு விளைவிக்கப்படும் தக்காளி பொள்ளாச்சி, கோயம்புத்தூர், ஒட்டன்சந்திரம், தலைவாசல், கோயம்பேடு சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் தற்போது தக்காளி விவசாயத்தில் அதிகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தக்காளி விவசாய பரப்பளவானது 3 ஆயிரம் ஏக்கரில் இருந்து 5 ஆயிரம் ஏக்கராக விரிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சரியத் தொடங்கியுள்ள விலை
தானியங்கள், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்த விவசாயிகளும், தற்போது தக்காளி விவசாயத்திற்கு திரும்பியுள்ளதால் டிசம்பர் முதல் வாரம் முதலே தக்காளி விலை சரியத் தொடங்கியது. தற்போது விலை ரூ. 15 என்ற நிலையில் இருக்கிறது இது மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறையும்
தக்காளி விலை மட்டுமல்ல மற்ற காய்கறிகளின் விலையும் சற்று குறைந்து மக்களின் மாதச் செலவை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. பட்டானி ரூ. 135ல் இருந்து ரூ. 50 ஆகவும், அவரைக்காய்(பட்டை) ரூ. 60 ல் இருந்து ரூ. 40 ஆகவும் குறைந்துள்ளது. இதே போன்று முட்டைகோசும் ரூ. 40ல் இருந்து ரூ. 20 ஆக குறைந்துள்ளது. ஜனவரி மாதத்தில் மேலும் பல காய்கறிகளின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.