காவிரி தீர்ப்பை கேட்டு அதிர்ச்சியடைந்தேன், வழக்கை அரசு சரியாக நடத்தவில்லை... துரைமுருகன்!
காவிரி நீர் தமிழகத்திற்கு குறைக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை: காவிரி நீர் தமிழகத்திற்கு குறைக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வழக்கை சரியாக நடத்தாத அதிமுக அரசு முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது : இந்தத் தீர்ப்பு என்னை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை காரணம் தமிழகத்திற்கு காவிரி நடுவர் மன்றம் அளித்த தண்ணீரை உச்சநீதிமன்றம் கிட்டதட்ட 15 டிஎம்சி அளவிற்கு குறைத்திருக்கிறது.
காவிரி நடுவர் மன்றத்தை கருணாநிதி அமைத்த காலத்தில் இருந்து இறுதித் தீர்ப்பை பெற்றவன் என்ற முறையில் அந்த துறையின் அமைச்சராக இருந்தவன் என்ற முறையில் இந்த தீர்ப்பை கேட்ட பிறகு என் நெஞ்சு மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகிவிட்டது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு தமிழகத்தில் காவிரி டெல்டா வளமாக இருக்குமா என்பது சந்தேகம்.
கோட்டை விட்ட அதிமுக அரசு
கஷ்டப்பட்டு கருணாநிதி 192 டிஎம்சி காவிரி நீர் தமிழகத்திற்கு என்ற தீர்ப்பை வாங்கினார். ஆனால் அதிமுக அரசு கருணாநிதி பெற்றுத் தந்த தண்ணீரின் அளவை குறைய விட்டதற்கு முழு காரணம் அதிமுக தான்.
வக்கீல்கள் மாற்றம்
கர்நாடகத்தில் இந்த வழக்கை தொடக்கத்தில் இருந்து நடத்தியவரே இன்று வரை அதனை நடத்துகிறார். ஆனால் தமிழகத்தில் பராசரன், கங்குலி போன்றவர்கள் வாதாடிய நிலையில் அவர்களை மாற்றிவிட்டு ஒவ்வொரு முறையும் ஒரு வழக்கறிஞரை போட்டு வாய்தா மேல் வாய்தா வாங்கி அதிமுக அலட்சியப்படுத்திவிட்டது.
கெடுத்து விட்டது அரசு
இதற்கு முழு பொறுப்பேற்று அரசு ராஜினாமா செய்ய வேண்டும். இனியும் ஆட்சியில் நீடிக்க அதிமுகவிற்கு எந்த வித தார்மீக உரிமையும் அரசுக்கு கிடையாது. வழக்கை சரியான முறையில் இவர்கள் நடத்தவில்லை, வாய்தாவிற்கு ஒரு வக்கீலை வைத்து அனைத்தையும் கெடுத்துவிட்டனர்.
ஏன் நடுவர் மன்றம் அமைக்கவில்லை
நாங்கள் வாங்கிக் கொடுத்த தீர்ப்பை இவர்கள் என்ன செய்தார்கள், அரசாணையில் போட்டார்கள் ஆனால் நடுவர் மன்றம் அமைத்தார்களா. கோதாவரி விஷயத்தில் அரசாணை வெளியிடப்பட்ட அடுத்த நாளே நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதே ஆனால் தமிழகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லையே இதற்கு யார் காரணம்.
வயிறு எறிகிறது
அதிமுகவில் ஆறேழு அமைச்சர்கள் இருந்தார்கள் அவர்களில் ஒருவருக்காவது காவிரி நீர் விவகாரம் பற்றி தெரியுமா. காவிரி தீர்ப்பை ஒவ்வொரு வரியாக படித்துப் பார்த்தவன் நான், இந்த தீர்ப்பை பார்த்து எனக்கு வயிறு எறிகிறது.
கிடைத்ததை விட்டுவிட்டார்கள்
அவமானமான தீர்ப்பு இது, தமிழகத்திற்கு கையில் கிடைத்ததை போய் உச்சநீதிமன்றத்தில் விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள் என்றால் இவர்களைப் போன்ற அரசு வேறு யாராவது இருப்பார்களா. இந்த நொடியே இவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்,எனக்கு வயிறு எறிகிறது என்றும் துரைமுருகன் வேதனை தெரிவித்துள்ளார்.