குலசேகரபட்டினம் தசரா திருவிழா.... 21-ஆம் தேதி தொடக்கம்
தசரா திருவிழா குலசேகரபட்டினத்தில் வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது.
நெல்லை: தசரா திருவிழா குலசேகரன்பட்டினத்தில் வரும் 21-ஆம் தேதி தொடங்கி 12 நாள்கள் நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 21-ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலை, இரவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

மாலையில் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இரவில் அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
தசரா திருவிழாவை முன்னிட்டு, காப்பு கட்டி வேடம் அணியும் பக்தர்கள் தங்களது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிதல் வேண்டும். வேடம் அணிபவர்கள் எந்த வேடம் அணிந்தாலும், அது புனிதமானது என்பதை உணர்ந்து, அதன் புனிதத் தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும்.
வேடம் அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதுக்கு உட்பட்டவராகவும், அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் என பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்சோதி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications