லோக்சபா தேர்தல்: 39 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்
சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரியை அறிவித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், தமிழக அரசிதழில் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், சென்னை வடக்கு தொகுதி, தெற்கு தொகுதி மற்றும் மத்திய தொகுதிக்கு முறையே அந்தந்த பகுதிக்கான மாநகராட்சி துணை கமிஷனர், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய தொகுதிகளுக்கு அங்குள்ள வருவாய் அதிகாரி (டி.ஆர்.ஓ.), அரக்கோணம், பொள்ளாச்சி தொகுதிகளுக்கு கூடுதல் கலெக்டர், ஆரணிக்கு சிறப்பு டி.ஆர்.ஓ. ஆகியோர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்கள். மற்ற 30 தொகுதிக்கும் அந்தந்த மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோல் ஒவ்வொரு தொகுதிக்கும் உதவி தேர்தல் அதிகாரிகளையும் நியமித்து, தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.