இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் - டிடிவி தினகரன் மீதான பிடி இறுகுகிறது
இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் தினகரன் பெயரை கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
டெல்லி: இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீதான பிடி இறுகிறது. தினகரனின் பெயரை கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
இடைத்தரகர் சுகேஷ் உடன் டிடிவி தினகரன் பேசிய குரல் சோதனையில் இரண்டு குரல்களும் ஒத்துபோவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தினகரன் பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம்
ஆர் நகர் இடைத்தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் தினகரன் தரப்பு ரூ.10 கோடி பேரம் பேசியதாகவும், ரூ.1.5 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
கைதான டிடிவி தினகரன்
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர். மேலும், டிடிவி தினகரன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின் சென்னை வந்து தினகரனிடம் விசாரணை நடத்தினர். கடந்த ஏப்ரல் 26ம் தேதி தினகரனை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். 42 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
தினகரன் பெயர் இல்லை
இந்நிலையில், திடீர் திருப்பமாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையில் தினகரன் பெயர் இல்லை எனவும் போதிய ஆதரம் இல்லை என்பதால், குற்றப்பத்திரிக்கையில் தினகரனின் பெயர் டெல்லி போலீசார் சேர்க்கவில்லை என்று தெரியவந்தது. எனவே, இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுவார் எனவும் செய்திகள் பரவியது.
சுகேஷ் சந்திரசேகர்
இந்த செய்தியை டெல்லி போலீஸ் இணை கமிஷனர் பிரவீர் ரஞ்சன் மறுத்தார். இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இடைத்தரகர் சுகேஷ் மீது மட்டுமே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது
தினகரனுக்கு செக் வைக்கும் டெல்லி
தினகரன் குற்றமற்றவர் என கூற முடியாது. தினகரன் உட்பட நான்கு பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அவர் விளக்கம் அளித்தார்.
போலீஸ் வசம் ஆடியோ
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருடன் தினகரன் டெலிபோனில் பேசிய ஆடியோ உரையாடல் ஆதாரம் டெல்லி போலீஸ் வசம் உள்ளது. இதில் தினகரன் குரலை பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் அனுமதி கேட்டனர். குரல் மாதிரிக்கு தினகரன் மறுத்து விட்டார்.
ஒத்துழைப்பு தர மறுத்த தினகரன்
குற்றவியல் சட்டத்தில் குரல் மாதிரியை பதிவு செய்ய விதிகள் எதுவும் இல்லை என கூறி குரல் சோதனைக்கு ஒத்துழைப்பு தர மறுத்து விட்டார். இந்த நிலையில் தினகரனை டெல்லி நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்து விட்டது. இதைத் தொடர்ந்து வேறு வழியில் தினகரன் குரல் மாதிரியை எடுக்க டெல்லி போலீசார் முடிவு செய்தனர்.
தனியார் சேனல்களுக்கு பேட்டி
தினகரன் தனியார் செய்தி சேனல்களுக்கு ஏராளமான பேட்டி அளித்துள்ளார். இதில் இருந்து அவரது குரல் மாதிரியை எடுக்க டெல்லி போலீசார் முடிவு செய்தனர். இதற்காக சென்னையில் உள்ள சில தனியார் தொலைக்காட்சி சேனல்களை அணுகி தினகரனின் பேட்டி அடங்கிய வீடியோவை பெற்றுள்ளனர். இதில் இருந்து குரல் மாதிரி எடுக்கப்படுகிறது.
குற்றப்பத்திரிக்கையில் தினகரன்
அதன் பிறகு அந்த குரல் மாதிரியுடன் சுகேஷ் சந்திரசேகருடன் தினகரன் பேசிய டெலிபோன் குரல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. இது தினகரன் குரலுடன் ஒத்துப்போவதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து தினகரனின் பெயரை கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க உள்ளனர்.
பிடி இறுகுகிறது
ஜாமீனில் வெளிவந்த தினகரன் கடந்த சில மாதங்களாக கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சில எம்எல்ஏக்களை ஆதரவாளர்களாக வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தினகரன் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டால் அவர் மீண்டும் திகார் சிறைக்கு செல்ல நேரிடலாம் என்றே கூறப்படுகிறது.