வாக்காளர்களுக்கு லஞ்சம்: ஆர்கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட அதிரடி தடை?
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளர் டி.டி.வி. தினகரனை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் வரும் 12-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் திமுகவின் மருது கணேஷ், ஓபிஎஸ் அதிமுகவின் மதுசூதனன், சசிகலா அதிமுகவின் தினகரன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
இத்தொகுதியில் தமிழகமே இதுவரை கண்டிராத வகையில் பல கோடி ரூபாய் பணப்பட்டுவாடாவை தினகரன் கோஷ்டி செய்துள்ளது. அத்துடன் தங்க நகைகளையும் வாக்காளர்களுக்கு வாரி இறைத்து லஞ்சமாக கொடுத்துள்ளது.

சிக்கும் ஆதரவாளர்கள்
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக தினகரன் ஆதரவாளர்கள் பலரும் கொத்து கொத்தாக சிக்கி வருகின்றனர். இத்தொகுதியில் கலவரத்தை உருவாக்கும் வகையில் வெளியூர் குண்டர்களையும் தினகரன் கோஷ்டி இறக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிரடி ரெய்டு
இந்த நிலையில் தினகரனுக்காக பணப்பட்டுவாடாவை மும்முரமாக நடத்திய அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த டோக்கன்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோட்டையில் ஆலோசனை
இதனிடையே தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் மற்றும் தேர்தல் உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி லாபி
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிட முடியுமா? அவரது முதல்வர் நாற்காலி கனவு நிறைவேறுமா என்பது தெரியவரும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். அதே நேரத்தில் தம்மை தகுதி நீக்கம் செய்வதைத் தடுக்கும் டெல்லி லாபிகளிலும் தினகரன் தரப்பு தீவிரம் காட்டி வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications