மதுரையில் ரூ.4 லட்சம், சென்னையில் 400 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்
சென்னை: சென்னையில் 400 கிலோ வெள்ளிப் பொருட்களையும், மதுரையில் ரூ.4 லட்சம் ரொக்கத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலலில் உள்ளன. வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்துள்ளது.

பறக்கும் படையினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் சோதனை நடத்தி வருகிறார்கள். உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கம், வேட்டி, சேலை, நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
அவர்கள் இதுவரை கோடிக் கணக்கில் பணம் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் மதுரை சாணாம்பட்டி நான்குவழிச் சாலையில் சென்ற அரசு பேருந்து ஒன்றில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் என சோதனை செய்தனர்.
அப்போது உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 லட்சம் ரொக்கத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் சென்னை பாரிமுனையில் தனியார் பேருந்து ஒன்றில் அதிக அளவில் வெள்ளிப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் குறிப்பிட்ட பேருந்தை மடக்கி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 400 கிலோ வெள்ளிப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications