தமிழக தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக: வேட்பாளர்களின் சமூகவலைதள கணக்குகளை கண்காணிக்கும் 'இ.சி.'
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சமூக வலைதள கணக்குகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பிரச்சாரத்தை துவங்கியுள்ளன. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்வதுடன் எதிரணியினரை தாக்கியும், கிண்டல் செய்தும் பேசப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில்,
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் கணக்குகள் மற்றும் பிளாக்குகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்க உள்ளது. சைபர்டெக் என்ற உள்ளூர் நிறுவனம் உருவாக்கியுள்ள சாப்ட்வேர் மற்றும் மைக்ரோசாப்ட் டூலை வைத்து கண்காணிக்கப்படும்.
சமூக வலைதளங்களில் வில்லங்கமாக, வெறுப்பில் ஏதாவது போஸ்ட் செய்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும். அனைத்து வேட்பாளர்களும் தங்களின் சமூக வலைதள கணக்கு விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் முதல்முறையாக வேட்பாளர்களின் சமூக வலைதள கணக்குகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.