தமிழறிஞர்கள் 52 பேருக்கு விருது : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ் அறிஞர்கள் 52 பேருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
சென்னை: தமிழறிஞர்கள் 52 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று விருது வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழர்களுக்கு பொன்னாடை போர்த்திய எடப்பாடி பழனிச்சாமி, பரிசுத் தொகையாக ரூபாய் 1 லட்சமும், 1 சவரன் தங்கப் பதக்கமும், தகுதிச் சான்று வழங்கினார். தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 லட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், 2016ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு. போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருதுகளையும், 2015ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது மற்றும் 2015ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளையும் சேர்த்து 52 விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
ஜெயலலிதா, தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் வழங்கிட ஆணை பிறப்பித்தார். அவ்வகையில் அயல்நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளருக்கு ஜி.யு.போப் விருது, உமறுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞருக்கு உமறுப் புலவர் விருது, சிறந்த தமிழ் அறிஞர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 32 பேருக்கு 'தமிழ்ச் செம்மல் விருது', கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்கம் செய்பவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 'முதலமைச்சர் கணினித் தமிழ் விருது', நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்று போற்றப்படும் காலத்தை வென்ற காப்பியத்தைத் தந்த இளங்கோவடிகள் பெயரில் 'இளங்கோவடிகள் விருது', சிறந்த தமிழ்ப் பெண் படைப்பாளருக்கு 'அம்மா இலக்கிய விருது', தரமான பிறமொழி படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு 'மொழி பெயர்ப்பாளர் விருது' ஆகிய புதிய விருதுகளை தோற்றுவித்து, தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடும் சான்றோர்களுக்கு 55 விருதுகளை அறிவித்து, சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளாக தமிழறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்து வந்தார்.
ரூ.5 லட்சம் பரிசு
ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, 2016ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதிற்கு மாணவர் மன்றம் தமிழ் அமைப்பு தெரிவு செய்யப்பட்டு, விருதுத் தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, கேடயம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றை அந்த மன்றத்தின் நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டது.
இலக்கிய விருதுகள்
கபிலர் விருதினை முனைவர் இல.க. அக்னிபுத்திரனுக்கும், உ.வே.சா. விருதினை முதுமுனைவர் ம.அ. வேங்கடகிருஷ்ணனுக்கும், கம்பர் விருதினை இலங்கை ஜெயராஜூக்கும், சொல்லின் செல்வர் விருதினை பி. மணிகண்டனுக்கும், ஜி.யு.போப் விருதினை வைதேகி ஹெர்பார்ட் சார்பாக ஆறுமுகம், உமறுப்புலவர் விருதினை பேராசிரியர் தி.மு. அப்துல் காதருக்கும்; இளங்கோவடிகள் விருதினை நா. நஞ்சுண்டனுக்கும், அம்மா இலக்கிய விருதினை ஹம்சா தனகோபால் ஆகிய விருதாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்பட்டது.
மொழிபெயர்ப்பாளர் விருது
2016ஆம் ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் நாகலட்சுமி சண்முகம், அ. ஜாகிர் உசேன், அல்லா பிச்சை (எ) முகம்மது பரிஸ்டா, உமா பாலு, முனைவர் கா. செல்லப்பன், வி. சைதன்யா, சி. முருகேசன், கு. பாலசுப்பிரமணியன், ச. ஆறுமுகம் பிள்ளை, முனைவர் கே.எஸ். சுப்பிரமணியன் ஆகிய விருதாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கி சிறப்பித்தார்.
கணினித் தமிழ் விருது
2015ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதினை செ. முரளி (எ) செல்வ முரளிக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடையும், 2015ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகள் வேம்பத்தூர் (எம்) கிருஷ்ணன் (சென்னை மாவட்டம்), முனைவர் மா.கி. ரமணன் (திருவள்ளூர் மாவட்டம்), கூ.மு. துரை (எ) கவிஞர் கூரம் துரை (காஞ்சிபுரம் மாவட்டம்), வி. பத்மநாபன் (எ) புலவர் வே. பதுமனார் (வேலூர் மாவட்டம்), ந. நாகராசன் (கிருஷ்ணகிரி மாவட்டம்), பா.இந்திரராசன் (திருவண்ணாமலை மாவட்டம்), கவிஞர் பெ. ஆராவமுதன் (விழுப்புரம் மாவட்டம்), முனைவர் அரங்க. பாரி (கடலூர் மாவட்டம்), செ. சுந்தரம் (எ) வெண்பாவூர் செ. சுந்தரம் (பெரம்பலூர் மாவட்டம்), முனைவர் ம. சோ. விக்டர் (அரியலூர் மாவட்டம்), கவிஞர் பி. வேலுசாமி (சேலம் மாவட்டம்), தகடூர். வனப்பிரியனார் (எ) கா. ராமசந்திரன் (தருமபுரி மாவட்டம்), புலவர் மா. சின்னு (நாமக்கல் மாவட்டம்), முனைவர் ச.சந்திரகுமாரி (ஈரோடு மாவட்டம்), ச. வரதசிகாமணி (கரூர் மாவட்டம்), முனைவர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் (கோயம்புத்தூர் மாவட்டம்) வழங்கப்பட்டன.
தலைமைச் செயலகத்தில் விருது
ஆ. முருகநாதன் (திருப்பூர் மாவட்டம்), மணி அர்ச்சுனன் (நீலகிரி மாவட்டம்), பேராசிரியர் தி.வெ. ராசேந்திரன் (திருச்சி மாவட்டம்), ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி (புதுக்கோட்டை மாவட்டம்), தி. அனந்தராமன் (சிவகங்கை மாவட்டம்), புலவர் தங்கராசு (தஞ்சாவூர் மாவட்டம்), வீ.ராமமூர்த்தி (திருவாரூர் மாவட்டம்), செ. செய்யது முகம்மது கலிபா சாகிப் (நாகப்பட்டினம் மாவட்டம்), ஜெகாதா (ராமநாதபுரம் மாவட்டம்), மறைந்த திருக்குறள் செம்மல் ந. மணிமொழியன் (மதுரை மாவட்டம்) சார்பாக அவரது மகள் மருத்துவர் அனுராதா கணேஷ், மா. பெரியசாமி (எ) தமிழ்ப் பெரியசாமி (திண்டுக்கல் மாவட்டம்), மறைந்த தமிழாசிரியர் ப. பாண்டியராசன் (தேனி மாவட்டம்) சார்பாக அவரது மகன் சண்முகராஜன், முனைவர் கா.இராமச்சந்திரன் (விருதுநகர் மாவட்டம்), முனைவர் கேப்டன் பா. வேலம்மாள் (திருநெல்வேலி மாவட்டம்), கா. அல்லிக்கண்ணன் (தூத்துக்குடி மாவட்டம்), முனைவர் சிவ. பத்மநாபன் (கன்னியாகுமரி மாவட்டம்); ஆகிய விருதாளர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கி சிறப்பித்தார்.