சசிகலா கூட்டத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி வெளியே வரமுடியுமா? பகிரங்கமாக சொல்லுங்க...ஓபிஎஸ் தடாலடி
சசிகலா கூட்டத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் வெளியே வரமுடியுமா? அல்லது முடியாதா? என்பதை அவர் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமநாதபுரம்: சசிகலா கூட்டத்தில் இருந்து முதல்வர் எடப்பாடியால் வெளியேற முடியுமா என்று ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தொண்டர்கள் அணி அணியாக வந்து குவிந்துள்ளனர். இதை பார்த்து நம்மை எதிர்க்கும் கூட்டத்தினர் வாயடைத்து போயுள்ளனர்.

எதிரிகளை வீழ்த்துவோம்
ராமன் எதிரிகளை வீழ்த்தியதுபோல தர்மயுத்தத்தில் நாமும் எதிரிகளை வீழ்த்துவோம். தீயவர்களின் சூழ்ச்சியால் அயோத்தியில் ராமனின் ஆட்சி எவ்வாறு தடைபட்டதோ அதேபோன்று தற்போது ஜெயலலிதாவின் ஆட்சிக்கு சிறுதடங்கல் வந்துள்ளது. மீண்டும் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றி ஜெயலலிதாவின் ஆட்சியை மலரச் செய்வோம்.

மக்கள் என் பக்கம்
தமிழக மக்களும், எங்கள் பக்கம்தான் இருக்கின்றனர். இது அணிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை குழுவை கலைத்த பின்பும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம் என்று எதிரணியினர் தினமும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

தந்தை போல் ஸ்டாலின்
முக ஸ்டாலின் என்னை பற்றி பல தவறான தகவல்களை கூறி வருகிறார். அவர் பொய் சொல்வதில் அவர் தந்தை கருணாநிதியை போன்று வல்லவர். இப்போது சட்டசபையில் ஆளும் கட்சியினர் மு.க. ஸ்டாலினுடன் புதிய கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றனர். ஆனால் சட்டசபையில் ஸ்டாலினை பார்த்து சிரித்தேன் என்பதை சசிகலா என் மீது பெருங்குற்றமாக கூறினார்

நம்பிக்கை வைத்துள்ளனர்
தமிழக மக்கள் அதிமுக மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் வைத்துள்ளார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலா கூட்டத்தில் இருந்து விடுபட்டு வெளியே வர முடியுமா, முடியாதா என்பது குறித்து பகிரங்கமாக பதிலளிக்க வேண்டும். அப்போதுதான் அணிகளின் இணைப்பு பற்றி பேச முடியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications