விஸ்வரூபமெடுக்கும் எடப்பாடியார் தரப்பு! சசி குடும்பத்துக்கு எதிராக ஜெ. பாணியில் அதிரடி நடவடிக்கைகள்?
சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஜெயலலிதா பாணியில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க முடிவெடுத்துவிட்டதாம் எடப்பாடியார் தரப்பு.
சென்னை: அதிமுகவை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைக்கும் எடப்பாடியார் தரப்பு மக்கள் செல்வாக்கைப் பெறுவதற்காக சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஜெயலலிதா பாணியில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா குடும்பத்துக்குள் நிலவும் அதிகாரப் போட்டியில், தினகரனா? திவாகரனா? என்ற கோஷம் அதிகரித்துள்ளது. பெங்களூரு சிறையில் சசிகலாவை, தினகரன் அடிக்கடி சந்தித்துப் பேசி வருகிறார்.

தூபம் போட்ட தினகரன்
ஆட்சியிலும் கட்சியிலும் நம்முடைய பிடி இல்லையென்றால், அனைத்தும் நழுவிவிடும். இதை உணராமல் குடும்பத்தில் உள்ளவர்கள் செயல்படுகின்றனர். அவர்களை எடப்பாடி அணியினர் எளிதாக ஏமாற்றுகின்றனர். நம்மால்தான் அனைத்தும் சாதிக்க முடியும் என இவர்களும் அதிகார போதையில் மிதக்கிறார்கள். இப்படியே சென்று கொண்டிருந்தால் பொதுச் செயலாளரான உங்களையும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என தூபம் போட்டிருக்கிறார் தினகரன்.

திவாகரன் முயற்சி
ஆனால் எடப்பாடியார் தரப்போ ஆட்சிக்குள் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் வந்துவிடக் கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளனர். இதனிடையே மன்னார்குடி லாபியின் பிடியில் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இருப்பதால், எடப்பாடியார் தரப்பிடம் நேரடியாகவே பேசினார் திவாகரன்.

கபளீகரம் செய்ய திட்டம்
அப்போது, நீங்கள் தினகரனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது. உங்கள் பக்கம் நான் இருக்கிறேன் என உறுதியாகக் கூறியிருக்கிறார் திவாகரன். இப்படியொரு வாக்குறுதியை எடப்பாடியார் தரப்பும் ஏற்றுக் கொண்டது. இதையே காரணமாக வைத்துக் கொண்டு அதிமுகவை தம் கையில் எடுத்துக் கொள்ள விரும்பினார் திவாகரன்.

எம்.எல்.ஏ.க்கள் குமுறல்
இதற்காக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக மன்னார்குடியில் ஒட்டப்பட்ட அனைத்து போஸ்டர்களிலும் எடப்பாடியாருடன் தன் மகன் ஜெயானந்த் படத்தையும் இடம்பெற வைத்தார். ஆனால் திவாகரன் நடத்தும் விழா குறித்து அறிந்த எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து குமுறியுள்ளனர்.

நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
அப்போது, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை ஏற்றுக் கொண்டாலும், அந்தக் குடும்பத்தில் உள்ள வேறு யாரையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். சிறைக்குச் செல்லும்போது, குடும்பத்தில் உள்ள ஒருவரை துணைப் பொதுச் செயலாளராக, சசிகலா நியமித்தது பெரும் தவறு. இது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கொள்கைக்கு எதிரானது. இதனால்தான், கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதுவே, தற்போது கரையான் போல அரித்துக் கொண்டு வருகிறது. இல்லாவிட்டால் ஓபிஎஸ் அணியைவிட பலமானதாக நாம் மாறியிருப்போம். கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்துக் கட்டியதைப் போல அவதிப்படுகிறோம். இந்த பெருச்சாளி என்பது தினகரன் மட்டுமல்ல. அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருமேதான். நாம் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து நம்மிடம் கலாட்டா செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள். அப்படிச் செய்தால், கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடே உங்கள் பக்கம் நிற்கும் என விவரித்துள்ளனர்.

ஜெ. பாணியில் அதிரடிகள்?
அதேபோல் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்து வெளியே வந்தால்தான், அதிமுகவும் ஆட்சியும் நீடிக்கும் என டெல்லி தரப்பினரும் கறாராக கூறிவிட்டனர். இதனால் ஜெயலலிதா பாணியில் அதிரடி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த இருக்கிறதாம் எடப்பாடியார் தரப்பு. ஆட்சிக்கு எதிராக சதி செய்த குற்றம் மட்டுமல்லாமல், வேறு சில குற்றசாட்டுகளையும் சசிகலா குடும்பம் மீது சுமத்த எடப்பாடியார் தரப்பு தயாராகி வருகிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications