வறட்சி மாநிலம் என அறிவித்த ஆறு மாதங்களில் அந்தர் பல்டி அடித்த அதிமுக அரசு! பின்னணி என்ன?
சென்னை: விவசாயிகள் தற்கொலையை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில் பதிலளித்துள்ள தமிழக அரசு, தமிழகத்தில் முழுவறட்சி இல்லை என்று கூறியுள்ளது.
அரசே இவ்வாறு கூறியுள்ளதால், விவசாய கடனை ரத்து செய்யுமாறும், வறட்சி நிவாரண நிதியை உயர்த்தி தருமாறும் மத்திய அரசிடம் தமிழக அரசால் இனி வலிமையாக கோரிக்கை வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அதை கொச்சைப்படுத்துவதை போல உள்ளது தமிழக அரசு தகவல். மேலும், பன்னீர்செல்வம் முதல்வராக பதவி வகித்த காலத்தில், கடந்த ஜனவரியில், தமிழகம் முழுக்கவே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியிட்டார்.
வறட்சி பாதிப்பு உள்ளதால், விவசாயிகள் கட்ட வேண்டிய நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்தார். மேலும், வறட்சியை சமாளிக்க ஊரக வேலை உறுதி திட்ட நாட்கள் 150ஆக அதிகரிப்பு செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்தார். பயிர்களுக்கு ஏற்ற வகையில் நிவாரண தொகையை அவர் அறிவித்தார்.
இந்த அறிவிப்புகளுக்கு நேர் எதிர்மாறாக எடப்பாடி பழனிச்சாமி அரசு சுப்ரீம்கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்துள்ளது. பன்னீர்செல்வம் அறிவித்ததாலேயே இப்படி பல்டி அறிவிப்பை எடப்பாடி அரசு வெளியிட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் அழுத்தம் இதன்பின்னணியில் உள்ளதா என்று மக்கள் கேட்கிறார்கள்.












Click it and Unblock the Notifications