குடங்களுடன் தெரு தெருவாக குடிநீருக்காக அலையும் மக்கள்.. எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா?
சென்னை உட்பட பல இடங்களில் குடிநீருக்கு மக்கள் திண்டாடும் நிலையில் முதல்வர் எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பருவமழை பொய்த்துப்போனதால் தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் ஒரு புறம் மாண்டு கொண்டிருக்கின்றனர்.
மழையின்றி நீர் ஆதாரங்கள் வறண்டு போயுள்ளன. இதனால் மனிதர்கள் முதல் கால்நடைகள் வரை தண்ணீர் தேடி அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது.
காற்று வாங்கும் குழாய்கள்
சென்னையின் பல இடங்களில் கார்ப்ரேஷன் குழாய்கள் தண்ணீரின்றி காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றன. தண்ணீர் லாரிகள் எப்போது வரும் என மக்கள் காலிக் குடங்களுடன் காத்துக்கிடக்கின்றனர்.
தெரு தெருவாக அலையும் மக்கள்
கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். ஒரு குடம் தண்ணீருக்காக தெரு தெருவாக அலையும் மக்கள் பல கிலோமீட்டர் சென்று தண்ணீர் சும்ந்து வருகின்றனர்.
இதுவரை தீர்வு காணவில்லை.
இதற்கு தமிழக அரசு இதுவரை தீர்வு காணவில்லை. இதற்கான நடவடிக்கைகளையும் எடுத்ததாக தெரியவில்லை. இந்நிலையில் எம்எல்ஏக்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு அளித்துள்ளது தமிழக அரசு.
ரூ.50 லட்சம் வருமானம்
இதனால் எஞ்சியுள்ள 4 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு எம்எல்வும் தலா 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவார்கள். பாதாள சாக்கடை, சாலை வசதி, அரசு கட்டடங்கள் என அனத்திலும் காசு பார்க்கும் எம்எல்ஏக்கள் தொழில்துறையினரையும் விடுவதில்லை.
அனைத்திலும் கமிஷன்
தொகுதி நிதியில் கமிஷன் என எல்லா வழியிலும் வருமானம் பார்க்கின்றனர் எம்எல்ஏக்கள். கூவத்தூர் கூத்துக்குப் பிறகு பல எம்எல்ஏக்கள் இதுவரை மக்களை நேரடியாக சந்திக்கவில்லை.
ஆட்சியை தக்க வைக்க
இந்நிலையில் எம்எல்ஏக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊதிய உயர்வு வழங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் எம்எல்ஏக்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த ஊதிய உயர்வை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.