ஓ.பி.எஸ்ஸுக்குத்தான் கொடுக்கலை.. எடப்பாடிக்காவது 2 பதவியையும் தூக்கிக் கொடுப்பாங்களா?
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: சசிகலா தரப்பால் முதல்வராக்கப்பட்டுள்ள எடப்படி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆக்கப்படுவாரா என கேள்வி எழுந்துள்ளது. அல்லது ஓபிஎஸ் போல பதவியை பறிகொடுப்பாரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். வர்தாபுயல், விவசாயிகள் பிரச்சனை, கிருஷ்ணா நீர் விவகாரம், ஜல்லிக்கட்டு என அனைத்து பிரச்சனைகளையும் துரிதாமாக கையாண்ட ஓ.பன்னீர்செல்வம் அதில் வெற்றியையும் கண்டார்.
இதனால் மக்கள் மத்தியில் அவருக்கான ஆதரவு அமோகமாக பெருகியது. இந்நிலையில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா கட்சியை கைப்பற்றினார்.

கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே
இதைத்தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் அமர ஆசைப்பட்ட அவருக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்களிடையே பெருகிய ஆதரவு எரிச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்சியில் இருந்த அவரது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு கட்சிப் பொறுப்பும் ஆட்சிப் பொறுப்பும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என வலியுறுத்தச் சொன்னார்.

சசிகலாவே முதல்வராக வேண்டும்
இதைத்தொடர்ந்து சசிகலாவின் ஆதரவு அமைச்சர்கள் சசிகலா தான் முதல்வராக வரவேண்டும் கட்சி தலைமையும் ஆட்சி தலைமையும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன் உச்சக்கட்டமாக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டிய சசிகலா தரப்பு அவரை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்தது.

ஓபிஎஸ் பகீரங்க குற்றச்சாட்டு
இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ், கடந்த 7ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் 40 நிமிடங்களுக்கும் மேலாக தியானம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதாக பகீரங்கமாக குற்றம்சாட்டினார்.

மோதலால் உடைந்த அதிமுக
அப்போது தொடங்கிய மோதல் காரணமாக அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. இதன் விளைவாக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவுவதைத் தடுக்கும் வகையில் எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் 10 நாட்கள் சிறைவைத்தது சசிகலா தரப்பு.

முதல்வராக எடப்பாடி தேர்வு
அதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரவே பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. சிறைக்கு செல்லும் முன்பாகவே தனது ஆதரவு அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபைக்குழு தலைவராக குடும்பத்தினருடன் சேர்ந்து சசிகலா தேர்வு செய்தார்.

எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி?
இதைத்தொடர்ந்து எம்எல்ஏக்கள் ஆதரவால் முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி. கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று சித்தாந்தம் பேசி நல்லாட்சி புரிந்த ஓபிஎஸை அவசர அவசரமாக பதவியில் இருந்து இறக்கிய அமைச்சர் பெருமக்கள் தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளர் ஆக்குமாறு சசிகலா குரூப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கப் போகின்றனரா?

சசியிடமிருந்து பிடுங்கப்படுமா பொ.செ.பதவி?
அல்லது நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலாவிடமிருந்து பொதுச்செயலாளர் பதவியை பிடுங்கி எடப்பாடி பழனிச்சாமியிடமே கொடுக்கப்போகின்றனரா?

டிடிவி.தினகரன் முதல்வரா?
அல்லது துணைப்பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனை பொதுச் செயலாளராக்கி அவரையே முதல்வராக்க முன்மொழிய போகிறார்களா?

விடை கிடைக்குமா
இதுவே சசிகலா குரூப்பின் குடும்ப ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக மக்களின் கேள்வியும் சந்தேகமும் ஆகும். தமிழக மக்களின் சந்தேகங்களை தீர்த்து கேள்விகளுக்கு பதிலளிப்பார்களா மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்...












Click it and Unblock the Notifications