நம்பிக்கை வாக்கெடுப்பு- எம்எல்ஏக்களுடன் எடப்பாடியார் ஆலோசனை
சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூவத்தூருக்கு சென்றுள்ளார்.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். சட்டசபையில் நாளை பெரும்பான்மை நிரூபிக்க எடப்பாடித் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என அதிமுக எம்எல்ஏக்கள் பிளவு பட்டுள்ளனர். ஓபிஎஸ் பக்கம் 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். தங்களுக்கு ஆதரவாக 124 எம்எல்ஏக்கள் இருப்பதாக ஆளுநரிடம் ஆதரவு கடிதம் அளித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதனையடுத்து அவரை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர், 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து நேற்று மாலை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. நாளை சட்டசபை கூடுகிறது. இதில் எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்க வேண்டும்.
முதல்வராக பதவியேற்ற உடன் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா சமாதியில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். உடனடியாக எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் ரிசார்ட்டுக்கு கிளம்பினர்.
பூந்தண்டலம் சென்று அங்கு அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். கூவத்தூர் ரிசார்ட்டில் கடந்த 10 நாட்களாக தங்கியுள்ள எம்எல்ஏக்கள் நாளை காலை சட்டசபைக்கு நேராக வர உள்ளனர். அனைவரும் சட்டசபைக்கூட்டத்தில் பங்கேற்று அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூவத்தூர் விடுதியில் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படி வாக்களிக்க வேண்டும், என்பது குறித்து ஆலோசனை நடத்தி விட்டு இன்று இரவு அங்கேயே தங்குவார் என்று கூறப்படுகிறது.
தனது தலைமையிலான அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிக்கும் பொறுப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பதால் இன்று இரவு அவருக்கு டென்சனான இரவாகவே கழியும் என்பதில் சந்தேகம் இல்லை.