நோக்கியா ஆலை எங்கும் போகவில்லை… மீண்டும் திறக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கமணி
சென்னை: சென்னையில் நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டசபையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்றுப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பொன்னுபாண்டி, நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதால் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
நோக்கியா ஆலை
நோக்கியா ஆலை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் தங்கமணி, நோக்கியா நிறுவனம் வேறு எந்த மாநிலத்திற்கும் செல்லவில்லை.
மீண்டும் திறக்கப்படும்
காங்கிரஸ் ஆட்சியில் முன் தேதியிட்டு வரிகள் விதித்ததன் காரணமாகவே, அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. எனவே, அது தொடர்பான பிரச்னையைத் தீர்ப்பதற்கு முயன்று வருகிறோம். மீண்டும் அந்த ஆலையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
சிமெண்ட் ஆலை
அதே போல் ஆலங்குளத்தில் சிமெண்ட் உற்பத்தி, வழக்கம் போல் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.
வனக்கல்லூரி மாணவர்கள்
இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பொண்ணு பாண்டி, வனக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறித்துப் பேசினார். இதற்கு பதில் அளித்த வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாணவர்களின் கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
காவிரியின் குறுக்கே அணை
சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தேமுதிக உறுப்பினர் பார்த்திபன், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக குறிப்பிட்டார்.
பேருந்து கட்டணம்
வேறொரு கேள்விக்கு பதிலளித்த முதல்வர், தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைக்கப்படாது என்றார். பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு எனவும் குறிப்பிட்டார்.