சென்னை தலைமை செயலகத்தில் நாளை தேர்தல் ஆணையம் கூட்டும் அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டம்!
சென்னை: தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை சென்னையில் நாளை தேர்தல் ஆணையம் நடத்துகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நாளை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக அண்மையில் ஞானேஷ்குமார் பொறுப்பேற்றார். இதனையடுத்து டெல்லியில் அனைத்து தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் ஞானேஷ் குமார். இந்தக் கூட்டத்தில் பேசிய ஞானேஷ்குமார், அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள் (சிஇஓ), மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (டிஇஓ), வாக்காளர் பதிவு அதிகாரிகள் (இஆர்ஓ), வட்டாரநிலையிலான அதிகாரிகள் (பிஎல்ஓ) உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றவும், அனைத்து சட்டப்பூர்வக் கடமைகளையும் அதாவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 & 1951; வாக்காளர் பதிவு விதிகள் 1960, தேர்தல் நடத்தை விதிகள் 1961 மற்றும் அவ்வப்போது இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை உறுதியுடன் நிறைவேற்றவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து வாக்காளர் பதிவு அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது தலைமை தேர்தல் அதிகாரி நிலையில் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு ஏப்ரல் 30-ந் தேதிக்குள் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளிடமிருந்து பரிந்துரைகளைத் தேர்தல் ஆணையம் கோரியிருந்தது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு அனுப்பிய தனிப்பட்ட கடிதத்தில், நிறுவப்பட்ட சட்டத்திற்கு ஏற்ப தேர்தல் செயல்முறைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, பரஸ்பரம் வசதியான தருணத்தில், கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோருடன் டெல்லியில் மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக தெரிவித்திருந்த இந்திய தேர்தல் ஆணையம், அரசியலமைப்பின் பிரிவு 326, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 23(4), 23(5) மற்றும் 23(6) ஆகியவற்றின் விதிகளின்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த பின்னணியில் சென்னையில் நாளை அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications