ஓபிஎஸ் அணியின் தேர்தல் அறிக்கை ரெடி… என்னென்ன முக்கிய அம்சம்?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் ஓபிஎஸ் அணி தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகிறது. அதன் முக்கிய அம்சங்களை முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகரில் ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். அதற்கான தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். இதனையடுத்து, ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதிமுகவில் விரிசல் ஏற்பட்டு சசிகலா அணியாகவும், ஓபிஎஸ் அணியாகவும் பிரிந்து செயல்படும் நிலையில், இரு அணியினரும் தங்களுக்கான வேட்பாளர்களை தனித்தனியாக அறிவித்துள்ளனர். மேலும், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று இரு அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் மனு செய்துள்ளனர்.
இதனிடையே, சென்னை ஆர்.கே.நகருக்கான இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாக மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வராகவும் ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்த ஜெயலலிதா, இந்தத் தொகுதிக்காக அறிவித்துவிட்டு செயல்படுத்தாமல் விட்ட அனைத்து திட்டங்களையும் தேர்தல் அறிக்கையில் சேர்க்க உள்ளதாக மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இது தவிர்த்து தற்போதுள்ள பிரச்சனைகளின் அடிப்படையிலும் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட உள்ளன என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications