200 அடி ஆழத்தில் இடறி விழுந்த யானை உயிரிழந்த சோகம்: வீடியோ
குன்னூர் -மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள கோடிக்கரை என்னும் பகுதியில் 200 அடி ஆழத்தில் யானை விழுந்து உயிரிழந்தது.
ஊட்டி: குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே அமைந்துள்ள கோடிக்கரை பகுதியில் 200 அடி ஆழத்தில் 16 வயது பெண் யானை தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. அதனை புதைக்க வழியில்லாத காரணத்தால் வனத்துறையினர் எரியூட்டினர்.
குன்னூர் பர்லியார், மரப்பாலம் ஆகிய பகுதிகளில் பலாப்பழம் சீஸன் தொடங்கிவிட்டது. வியாபாரிகள் சாலையோரத்தில் பலாப் பழங்களை விறகக் கூடாது என வனத்துறையினர் தடை போட்டுள்ளனர். இருப்பினும் வியாபாரிகள் தடையை மீறி சாலையில் வைத்து பலாப்பழங்களை விற்று வருகின்றனர்.
பர்லியார் மற்றும் மரப்பாலம் வனப்பகுதியில் பலாப் பழத்தை சாப்பிட யானைகள் கூட்டமாக வந்துள்ளன. அப்போது 16 வயது பெண் யானை பாறையில் நடக்கும்போது கால் இடறி 200 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது. இந்த தகவலறிந்த வனத்துறையினர், யானை விழுந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.
இறந்த யானையை அதே இடத்தில் புதைக்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் அங்கு பாறைகள் நிறைந்து இருந்ததால் குழி தோண்ட முடியவில்லை. இதையடுத்து யானை அங்கேயே எரியூட்டப்பட்டது.
கோயமுத்தூர் மாவட்டத்திலும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விபத்தில் சிக்கி இறக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதைத் தடுக்க அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும். காரணம் ஒரு யானை இறப்பது என்பது ஒரு வனம் இறப்பதற்கு சமம் என சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் விலங்குநல ஆர்வலர்களும் கூறுகின்றனர்.