ஓசூர் அருகே சாலையை கடந்த யானை பஸ் மோதி படுகாயம்! நெடுஞ்சாலையில் டிராபிக் ஜாம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஆண் யானை மீது பேருந்து மோதியதில் யானை படுகாயமடைந்தது. 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் வனத்துறையினர் கிரேன் மூலம் யானையை லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.
வனப்பகுதியில் இருக்கும் யானைகள் அவ்வப்போது, தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் புகுவது வழக்கமானது நிகழ்வு தான் என்ற போதிலும் அவ்வாறு புகும் யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதும், சாலை விபத்துகளில் சிக்குவதும் தொடர்ந்து வருகின்றன. சமீபத்தில் மதுக்கரையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை ஒன்றை வனத்துறையினர் பிடித்தனர். எனினும் யானை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட அது உயிரிழந்தது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு கிருஷ்ணகிரியில் யானை ஒன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளது. இன்று காலை ஓசூரில் சாலையை கடக்க முயன்ற யானை மீது பேருந்து மோதியதில், யானை படுகாயமடைந்தது.

யானை மீது பேருந்து மோதி விபத்து
ஒசூரை அடுத்த சூளகிரி அருகே நனர் கிரேடு பகுதியில், சாலையை கடக்க முயன்ற யானை மீது அரசு விரைவு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை சுமார் 6 மணியளவில் இரண்டு யானைகள் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றன. அந்த சமயத்தில், அவ்வழியாக வேகமான வந்த கும்பகோணம் - பெங்களூரு அரசு விரைவுப் பேருந்து, எதிர்பாராத விதமாக ஒரு யானையின் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த யானை நிலைதடுமாறி கீழே சரிந்து விழுந்தது. மற்றொரு யானை வனப்பகுதியில் சென்று விட்டது.
உயிருக்கு ஆபத்தில்லை
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கதிரவன், தருமபுரி வனப் பாதுகாவலர், மாவட்ட அலுவலர், மாவட்ட டி.எஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கால்நடை மருத்துவர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. யானைக்கு தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது, யானையின் உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் சிகிச்சை
யானையை வனப்பகுதிக்கு கொண்டு சென்று கூடுதல் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ராட்சத கிரேன் உதவியுடன் யானையை வாகனத்தில் ஏற்றினர். பின்னர் யானை அங்கிருந்து கொண்டு சொல்லப்பட்டது. யானை உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன் அதை முதுமலை சரணாலயத்துக் கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

போக்குவரத்து பாதிப்பு
நெடுஞ்சாலையில் யானைக்கு விபத்து ஏற்பட்டதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானையை அங்கிருந்து மீட்டுச் செல்ல 3 மணி நேரம் ஆகியது. இதனால் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் தேங்கின. இதனையடுத்து தற்காலிகமாக மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

விபத்துகளும்-யானைகளும்
கடந்த 2003 மார்ச் மாதம் ராயக்கோட்டை அருகே பெரியநாகதுணை எனும் இடத்தில் ரயில் மோதி 5 யானைகள் உயிரிழந்தன. 2013 பிப்ரவரி மாதம் அதே இடத்தில் ரயில் மோதி 2 யானைகள் பலியாகின. இதுபோல யானைகள் விபத்துகளில் சிக்குவதும், உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது.

உடல் நலக் குறைவு
இது குறித்து வன அதிகாரிகள் கூறுகையில், உயிரிழந்த யானை 20 வயது மதிக்கத்தக்கது. கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இப்பகுதியில் யானை சுற்றித் திரிந்தது. இந்நிலையில் யானை உயிரிழந்துள்ளது. பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, யானையின் இறப்புக்கான முழு விவரம் தெரியவரும் என்று கூறினார்.
அண்மைக்காலமாக கோவை மாவட்டத்தில் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இம்மாதத்தில் உயிரிழந்த யானைகளில் இது 4வது யானை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications