குதூகலமாய் துவங்கிய “யானைகள் புத்துணர்வு முகாம்” - பார்வையாளர்கள் காண ஏற்பாடு
சென்னை: வண்டலூர் பூங்காவில் யானைகளுக்கு தொடங்கியுள்ள புத்துணர்வு முகாமினை பார்வையாளர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இதனைக்காண தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று காலை தொடங்கப்பட்டது. இதனை பார்வையாளர்கள் கண்டுகளிக்கவும் பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
48 நாட்கள் முகாம்:
இதுகுறித்த செய்திக் குறிப்பில், "உயிரியல் பூங்காவில் இன்று காலை 10 மணியளவில் யானைகள் புத்துணர்வு முகாம் துவக்கி வைக்கப்பட்டது. முகாம் தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும்.
குட்டி யானைகளும்:
இம்முகாமில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் தாயினால் கைவிடப்பட்ட கைவளர்ப்பு யானைகள் உரிகம், கிரி மற்றும் அசோகன் ஆகியவை கலந்து கொண்டன.
வெல்லமும், கரும்பும் உணவு:
இப்பூங்காவில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு வழக்கமாக கேழ்வரகு களி, அரிசி சோறு, கொள்ளு, பச்சைப்பயிறு, வாழைப்பழம், பப்பாளி, வெல்லம், கரும்பு, தேங்காய், உப்பு, புல் மற்றும் மரத்தழைகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
அஷ்ட சூரணம் வழங்கல்:
முகாமை முன்னிட்டு கூடுதலாக அஷ்டசூரணம், சவன்ப்பிராஷ், வைட்டமின் கலவை, தாது உப்பு கலவை, புரோட்டீன் கலவை, செரிமான அபிவிருத்தி மருந்துகள், தென்னை ஓலைகள், மூங்கில் தழைகள், வாழைத்தண்டு ஆகியவை வழங்கப்படுன்றன. மேலும் அரிசி சோறு, வெல்லம், உப்பு, பச்சைப் பயிறு ஆகியவற்றின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வேளை குளியல்:
யானைகள் இரண்டு வேளை குளிக்க வைக்கப்படுகிறது. வெயில் நேரங்களில் சேற்றிலும், குளத்திலும் குளிக்க வைக்கப்படுவதுடன் யானைகளுக்கு பரிபூரண ஓய்வும் வழங்கப்படும். பூங்கா விலங்கு மருத்துவர்கள் யானைகளை தினந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்வார்கள். பூங்காவில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமை பார்வையாளர்கள் கண்டுகளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உடல்நல ஆரோக்கியமே முக்கியம்:
முகாமினால் யானைகளின் உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை மேம்படுத்துவதுடன் யானைகள் புத்தாக்கமும், புத்துணர்ச்சியும் பெறுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.