ஜல்லிக்கட்டு போட்டியில் பலியாகும் வீரர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் - எடப்பாடி வாக்குறுதி!
சென்னை: "அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், காளைகள், வீரர்களுக்கு காப்பீடு செய்யப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உபட்ட சாலப்பாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, இன்று நாமக்கல் புறவழிச் சாலையை ஒட்டிய சாலப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு போட்டியை இன்று தொடங்கி வைத்தார். இதில், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள், ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் ஜல்லிக்கட்டு போட்டியின் போது யதேச்சையாக உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்" என அறிவித்தார்.
மேலும், "ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு, பதிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு அரசே இன்சூரன்ஸ் செய்து கொடுக்கும். காளைகளின் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அரசே இன்சூரன்ஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications