சாக்லெட் ஆசை காட்டி 2 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் - குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை!
ஈரோடு: ஈரோட்டில் சாக்லேட் தருவதாக கூறி இரண்டு சின்னஞ் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி ஈரோடு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலுள்ள திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். வாகனத் தரகரான இவர் கடந்த வருடம் ஒரு நாள் மாலை 4 மணியளவில் அங்குள்ள நகராட்சி பள்ளி அருகே நின்றபோது 4 ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது கொண்ட இரண்டு சிறுமிகள் அந்த வழியாக வந்தார்கள்.
அவர்களை அருகில் அழைத்த சீனிவாசன் அவர்களிடம் நைசாக பேசி அங்குள்ள பெட்டிக்கடையில் இருந்து மிட்டாய்கள் வாங்கி கொடுத்துள்ளார். இருவரையும் பின்னர் தனது வீட்டில் நிறைய சாக்லேட் இருப்பதாகவும், வீட்டுக்கு வந்தால் அவற்றை இருவருக்கும் தருவதாகவும் ஆசை காட்டினார்.
அதனை உண்மை என்று நம்பிய சிறுமிகள் இருவரும் அவருடன் வீட்டுக்கு சென்றார்கள். வீட்டுக்கு சென்ற சீனிவாசன் அச் சிறுமிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் அழுதுகொண்டே வீட்டுக்கு சென்று நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தனர். இதுபற்றி சிறுமிகளின் பெற்றோர்கள் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்தனர். மேலும் அவர் மீது ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.திருநாவுக்கரசு நேற்று தனது தீர்ப்பினை வழங்கினார். அதில், இரு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த சீனிவாசனுக்கு 2 ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூபாய் 200 அபராதம் விதித்தார். இந்த இரு தண்டனைகளையும் அவர் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி தனது தீர்ப்பில் சீனிவாசனை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இழப்பீட்டு தொகையாக தலா ரூபாய் 2 லட்சம் வழங்க தமிழக அரசுக்கும் பரிந்துரை செய்துள்ளார்.