அப்பல்லோவுக்கு வெளியில்தான் குழப்பம்.. உள்ளே அத்தனை பேரும் உற்சாகமாக உள்ளனராம்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குள் சென்று வந்த தலைவர்கள் பலரும் உள்ளே அனைவரும் வழக்கமான உற்சாகத்துடன்தான் உள்ளனர் என்று கூறி வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலம் பெற வேண்டி அதிமுகவினர் தொடர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். அப்பல்லோ வாசலில் தினசரி குழுமி காத்துக் கிடக்கின்றனர்.
பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் முதல்வர் உடல் நலம் குறித்து அறிய அப்பல்லோவுக்கு போய் வந்தவண்ணம் உள்ளனர். அனைவரும் அமைச்சர்களைச் சந்தித்துப் பேசியதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் அப்பல்லோவுக்குள் உண்மையிலேயே என்ன நிலை காணப்படுகிறது என்று சில தலைவர்களிடம் கேட்டபோது நமக்குத் தெரிய வந்தது...
உற்சாகம் நிலவுகிறது
அப்பல்லோ மருத்துவமனைக்குள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என அனைவருமே உற்சாகத்துடன்தான் உள்ளனர். யாரிடமும் எந்த சோகமும் இல்லை.
இயல்பாக உள்ளனர்
அமைச்சர்கள் உள்பட அனைவருமே இயல்பாகவே உள்ளனர். எந்தப் பதட்டமும், பரபரப்பும் அவர்களிடம் இல்லை. வெளியில் உள்ள நிலைமைக்கு நேர் மாறாகத்தான் உள்ளே நிலவரம் உள்ளது.
சசிகலா மட்டும் முதல்வருடன் இருக்கிறார்
முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அறையில் சசிகலா மட்டும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் இல்லாத சமயங்களில் இளவரசி இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் தேறி வருகிறார்
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் வேகமாக தேறி வருவதாக டாக்டர்கள் கூறுவதாக அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் கூறுகின்றனர். அவர்களின் முக பாவனை, பேச்சுக்களை வைத்துப் பார்க்கும்போது முதல்வர் நலமாக இருப்பதாகவே தெரிகிறது.
கவலைப்பட எதுவும் இல்லை என்றே தெரிகிறது
மொத்தத்தில் முதல்வர் உடல் நலம் குறித்துக் கவலைப்படும் அளவுக்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. வெளியில் உள்ளவர்களை விட உள்ளே இருப்பவர்கள் வழக்கம் போல இருக்கிறார்கள், உற்சாகமாகவே இருக்கிறார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.