செப்டம்பர் 5ஆம் தேதி அனைத்தும் தெரியவரும்... தொடர்ந்து டிவிஸ்ட் வைக்கும் அழகிரி!
தன்னிடம் திமுக குறித்து எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை: தன்னிடம் திமுக குறித்து எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என முக அழகிரி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 5ஆம் தேதி அனைத்தும் தெரிய வரும் என்றும் அழகிரி கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி என்ன பேசினாலும் பெரிதாக பார்க்கப்படுகிறது. காரணம் கருணாநிதி மறைவுக்கு பிறகும் அவர் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டதுதான்.
ஸ்டாலின் பிடியில் உள்ள திமுகவில் அழகிரிக்குஇடமில்லை. இதனால் அதிருப்தியில் உள்ள அழகிரி அடுத்து என்ன செய்யப் போகிறார் என தமிழக அரசியலில் கவனிக்கப்பட்டு வருகிறார் அழகிரி.
செப்டம்பர் 5ஆம் தேதி
இந்நிலையில்தான் ஸ்டாலின் தரப்புக்கு தனது பலத்தை காட்ட சென்னையில் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளார். செப்டம்பர் 5ஆம் தேதி சென்னை அண்ணாசாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடைபெறும் என அறிவித்துள்ளார் அழகிரி.
ஆதங்கத்தை தெரிவிப்பேன்
அன்றைய தினம் தனது ஆதங்கத்தை தெரிவிப்பேன் என்று டிவிஸ்ட் வைத்துள்ளார். இந்நிலையில் நாமக்கல்லில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அழகிரி பங்கேற்றார்.
என்னிடம் கேட்காதீர்கள்
அப்போது அவரை மொய்த்த பத்திரிக்கையாளர்கள் திமுக குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அழகிரி தான் தற்போது திமுகவில் இல்லை, ஆகையால் தன்னிடம் திமுக குறித்து எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என்றார்.
5ஆம் தேதிக்கு பின்னர்
மேலும் தற்போது எதுவும் பேசும் சூழ்நிலையில் இல்லை என்றும் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குப் பின்னர் தெரியவரும்.
காலம் வரும் போது பதில் சொல்கிறேன்.
முக்கிய முடிவு
ஆதரவாளர்களிடமும், கருணாநிதியின் உண்மை விசுவாசிகளிடமும் கலந்துபேசி முக்கிய முடிவு எடுக்கப்படும். கலைஞரின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் இருக்கிறார்கள்.இவ்வாறு அழகிரி கூறினார்.