வீடு திரும்ப முடியாது என்று வைகோவை எச். ராஜா விமர்சித்தது அநாகரீகம்- இளங்கோவன்
கோவை: மோடியை விமர்சித்தால் வீடு திரும்ப முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்தது மிகவும் அநாகரீமானது, கண்டிக்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இன்று கோவை வந்த இளங்கோவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மோடியை கடுமையாக விமர்சித்தால் வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசியலில் கருத்துகள் தொடர்பாக விமர்சனங்கள் எழத்தான் செய்யும். அதற்காக வைகோவை எச்சரித்து எச்.ராஜா கூறியது அநாகரீகமான செயல்.
குஷ்பு காங்கிரசில் இணைந்துள்ளார். அவரை வரவேற்கிறோம். கட்சி வளர்ச்சிக்காக அவர் காங்கிரசில் தன்னை இணைத்துள்ளார். இந்தியா ஜனநாயக நாடு. காங்கிரசுக்கு நடிகர்கள் யார் வந்தாலும் வரவேற்போம். குஷ்பு மூலம் காங்கிரஸ் கொள்கைகளை தமிழகம் முழுவதும் பரப்புவோம்.
ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கியதால் காங்கிரசுக்கு எந்த இழப்பும் இல்லை. 2016 ல் நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைக்கும் என்று கேட்கிறார்கள். தேர்தலின் போது எங்கள் தலைமையில் யார் வந்தாலும் வரவேற்போம்.
கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சினைக்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.