எம்.எல்.ஏக்களை மிரட்டி ஆதரவு கடிதம் வாங்குவதா? ஈ.வி.கே.எஸ். குற்றச்சாட்டு
அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் மிரட்டி ஆதரவு கடிதம் பெறப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் மிரட்டி ஆதரவு கடிதம் பெறப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி பன்னீர்செல்வத்தையோ, எடப்பாடி பழனிச்சாமியையோ ஆதரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் சிறைவைத்துள்ளது மன்னார்குடி கோஷ்டி. எப்படியும் முதல்வர் பதவியை கைப்பற்றி விடலாம் என நினைத்த சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பாதகமாக அமைந்தது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. இதையடுத்து சசிகலாவின் விசுவாசியான எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுத்து முதல்வராக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
இதனிடையே எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று சசிகலா தரப்பு அதிமுகவினரும், மிரட்டி கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பன்னீர் செல்வம் ஆதரவு அதிமுகவினரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் மிரட்டி ஆதரவு கடிதம் பெறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இன்னும் அதிமுக சசிகலா பிடியில் தான் உள்ளது. அவரது பிடியில் இருக்கும் வரை அதிமுகவை மக்கள் ஏற்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சசிகலாவுக்கும் ஆதரவு இல்லை, ஓ.பன்னீர் செல்வத்துக்கும் ஆதரவு இல்லை. திமுகவின் நிலைப்பாட்டை பொறுத்து காங்கிரஸ் முடிவை அறிவிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications