தினகரன் சொல்லித் தான் ஜெ. வீடியோவை வெளியிட்டார் வெற்றிவேல்... உண்மையை உடைத்த மாஜி எம்எல்ஏ
டிடிவி தினகரன் சொல்லித் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டார் என்று முன்னாள் எம்எல்ஏவும், தினகரன் ஆதரவாளருமான ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி : டிடிவி தினகரன் சொல்லித் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டார் என்று முன்னாள் எம்எல்ஏவும், தினகரன் ஆதரவாளருமான ராஜசேகரன் தெரிவித்துள்ளார். ராஜசேகரனின் இந்த கருத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்டதாக சொல்லும் வீடியோ காட்சி ஒன்றை ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் டிடிவி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். தான் வீடியோவை வெளியிடுவது தினகரனுக்குத் தெரியாது என்றும் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்புவதை தாங்க முடியாமலுமே வீடியோவை வெளியிடுவதாக வெற்றிவேல் கூறினார்.
தினகரனும், வெற்றிவேலிடம் வீடியோவைக் கொடுத்தது தான் தான் என்றும் ஆனால் அவர் வீடியோவை வெளியிடுவார் என்று நினைக்கவில்லை என்றும் கூறினார். எனினும் வீடியோவை வெளியிட்டதற்காக வெற்றிவேல் மீது தினகரன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கலங்காத வெற்றிவேல்
சசிகலா மற்றும் தினகரனிடம் வீடியோவை வெளியிட்டதற்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வேன் என்று தில்லாக சொன்னார் வெற்றிவேல். பொங்கலை முன்னிட்டு சசிகலாவை சிறையில் சந்தித்த போது வீடியோ விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டதாக கூறிய வெற்றிவேல், சிரித்த முகத்துடனே தினகரன் பேட்டியளிக்கும் போது அருகில் நின்று கொண்டிருந்தார்.
கிருஷ்ணப்ரியா வலியுறுத்தல்
ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டது வேதனை அளிப்பதாக இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா கூறி இருந்தார். விவேக்கும், தானும் தான் அந்த வீடியோவை சசிகலா சொன்னதன் பேரில் தினகரனிடம் அளித்ததாகவும் வீடியோவை ரிலீஸ் செய்த வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிருஷ்ணப்ரியா கூறி இருந்தார்.
உண்மைய சொன்ன ராஜசேகரன்
இதனிடையே தினகரனின் ஆதரவாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ராஜசேகரன் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜசேகரன் கூறியதாவது : ஜெயலலிதா வீடியோவை வெற்றிவேலிடம் கொடுத்து வெளியிடச் சொன்னது தினகரன் தான். வெற்றிவேல் கூட தயங்கினார்.
தைரியம் சொன்னேன்
ஆனால் நான் தான், வெளியிட்டுவிடுங்கள் வெற்றிவேல், போட்டால் வழக்கு தானே போடுவார்கள் பார்த்துக் கொள்ளலாம் என்றேன். அதன்படியே வெற்றிவேலும் வீடியோவை வெளியிட்டார், அதில் ஜெயலலிதா நல்ல நிலையில் மருத்துவமனையில் இருந்ததை மக்கள் அனைவரும் தெரிந்து கொண்டனர்.
டோக்கன் கொடுத்ததும் உண்மையே
ஆர்கே நகர் தேர்தலில் இரண்டரை லட்சம் வாக்காளர்களுக்கும் 6 ஆயிரம் வீதம் பணம் கொடுத்துவிட்டார்கள். நாங்கள் என்ன செய்வது என்று நினைத்தோம் 20 ரூபாய் டோக்கன் தான் கொடுத்தோம், கண்டிப்பாக பணம் உண்டு என்று சொன்னோம் என்று ராஜசேகரன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.