தமிழ்நாடு அடுத்த “டார்கெட்” - பாஜக தலைவர் அமித் ஷா இம்மாதம் சென்னை வருகை
சென்னை: பாஜக தலைவர் அமித் ஷா வருகின்ற 20 ஆம் தேதி அன்று சென்னை வர இருப்பதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
ஹரியானா, மகராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து தமிழகத்தின் மீது தன் பார்வையை தேசிய தலைவர் அமித்ஷா திருப்பியுள்ளார்.
இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்து அவர்களுடன், தமிழக கட்சி வளர்ச்சி குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்த ம.தி.மு.க கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணியில் இருந்து விலகியது. தே.மு.தி.க, பா.ம.க, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை பாஜக கூட்டணியில் தொடரும் நிலையில், சட்டசபை தேர்தலுக்கு தங்களை தயார்படுத்தும் பணியில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு அச்சாரமாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 20 ஆம் தேதி சென்னை வருகிறார்.
அன்று மாலை 4.30 மணிக்கு மறைமலைநகரில் நடக்கும் பாரதீய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்திற்கு பிறகு மறுநாள் காலை 21 ஆம் தேதி கமலாலயத்தில் அவர் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.