தேனியில் கள்ளநோட்டை அச்சடித்து ஏடிஎம்ல் டெபாசிட் செய்த 'மகா புத்திசாலிகள்' கைது!
தேனி மாவட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
Recommended Video
தேனி: கள்ளநோட்டு அச்சடித்து அதனை தனியார் வங்கி ஏடிஎம்-மில் டெபாசிட் செய்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
தேனி- கம்பம் சாலையில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பணம் செலுத்தும் மிஷினில் கடந்த 4-ம் தேதியில் இருந்து நேற்று வரை வத்தலக்குண்டுவைச் சேர்ந்த ஜஹாங்கீர் என்பவர் கடந்த சில தினங்களில் பல லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். அதில் 40 ஆயிரம் ரூபாய்க்கு ஒரே வரிசை எண்கள் உள்ள ரூபாய் நோட்டுக்கள் இருந்ததால், அவை கள்ளநோட்டு என்று கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக வங்கி கிளை மேலாளர் ஜோசப் இமானுவேல் தேனி காவல் நிலையத்தில் பணத்தை டெபாசிட் செய்த ஜஹாங்கீர் பற்றி புகார் கொடுத்தார். இதையடுத்து ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஜஹாங்கீரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து போடி நாயகனூரைச் சேர்ந்த அப்பாஸ் மற்றும் கதிரேசன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் அச்சடிக்கும் பிரிண்டர்கள் மற்றும் வங்கிளில் பயன்படுத்தப்படும் ரப்பர் ஸ்டாம்கள், பணம் கட்ட ரிசர்வ் வங்கியில் பயன்படுத்தும் அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் பேப்பர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இந்தக் கும்பல் அச்சடித்து வைத்திருந்த 18 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பும் தேனி மாவட்டத்தில் பல லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகளுடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து தேனியில் கள்ளநோட்டு கும்பல்களை கைது செய்யப்படுவதால் அம்மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொள்ள தேனி மாவட்ட காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.